பிணவெழுத்து - பாண்டூ







எழுத்தொன்று செத்துக் கிடக்கிறது அனாதைப் பிணமாய்!
எழுதிய ஆவியோ சுற்றி அலைகிறது அரற்றியபடி!
ஊமையான உண்மைகள் ஒப்பாரி வைக்கின்றன அழுதுபுரண்டு!
சிக்கி சிதலமடைந்த இதயம் கலைத்துப்போட்ட பிரதிக்குளிருந்து
துருத்துகிறது வலப்பக்கமாய்!
அழுகுதலின் அரிதாரத்தையும் நாற்றத்தின் வாசனையையும்
முன்மொழியபடுகிறன அவசர அவசரமாய் சங்கூதி!

பாடையில் கிடத்தப்பட்ட அனாதைப் பிணத்துக்கு
குவிகின்றன மாலைகளும் சில்லரைகளும்!
சடலங்களாய் கனக்கத்தான் செய்கின்றன
உயிர்நாடியை தொலைத்திட்ட அவ்வெழுத்துகள்!
இடுகாட்டை தன் வயிற்நிரப்ப வட்டமிடுகின்றன
பிணந்திண்ணிக் காகங்களும் கழுகுகளும்!
புதைக்கப்பட்டதை அடையாளப் படுத்துகிறது
குறிகளின் ஆலிங்கனத்தால் ஆன சமாதி!
சுருட்டும் சாராயமும் படையலாக்கி
அவிழ்த்துவிடப்படுகின்றன அம்மணங்கள்!
தொடரும் கேளிக்கை கூத்துகளில் இடம்பிடிக்க
கல்லறையொன்றை கட்டிக்கொள்ளச் சொல்லி
நம்மை ஓலமிட்டழைக்கின்றன பிணவெழுத்துக்கள்!!