உமா சக்தி கவிதைகள்

1) 

ஆதி மனிதராதல்

உன்னை எழுதுகிறேன்
மங்காத  மை  கொண்டு
நினைவின் நாளேட்டில்
ஒரு பக்கத்தில்
குழந்தையாய் என் மடி யாசிக்கிறாய்
வளையலுக்குள்
விரலை விட்டு
பக்கத்தில் அமர்ந்து முகத்தில்
படிக்கின்றாய்  ஒரு முழு  நூலை .
அள்ளி அணைத்து
ஆயிரமாயிரம் முத்தங்கள் தர
இடம் மாற்றிக் காட்டி
என்னையும்  இழுத்துக்  கொண்டு
சமுத்திரத்தினுள்  குதிக்கிறாய்
அபூர்வ  முத்தொன்றைத்  தேடி.
காதலனாய்  தாமரை இலைக்  கை
பொதித்து
என்னை 
நீர்த் துளியாய்  ஏந்துகிறாய்
புற உலகம் மறந்து 
விழிகளாலேயே
உயிர் திறக்கச் செய்கிறாய்
தோளில் கைபோட்டு பொண்டாட்டி
என்கிறாய்
சிரித்து சிலிர்த்து புன்னகைக்கிறேன்
நெற்றியில் கழுத்தில் பின் உதட்டில்
முத்தங்களை ஒத்தடமாய்  இடுகிறாய்
எழுதிக் கொண்டிருக்கும்
பக்கங்களிலிருந்து
நழுவிச் செல்கிறோம்
இதோ நமக்கான வனாந்திரத்தில்
அலைந்து திரிகிறோம்
ஆதி மனிதர்களாய்!


2) 

உன்னுடன்....

வாசலற்ற
கற்கோட்டை ஒன்றினுள்
வெகு நாட்களாய்
அலைகின்றோம்.
காலம்  உறை மெழுகிட்ட
பல்லாயிரம்  சிலைகள்
விழித்துப் பார்க்கின்றன
சுற்றி வர  நின்று.
ஒவ்வொன்றுகுள்ளும்
ஒரு நூறு  கதைகள்
சொற்கள்  உதிரத் தொடங்கிய   நொடியில்
கூரையற்ற வெளியிலிருந்து
ஆயிரம் நூல்கள்  இறங்கின   மழையாய் .
முழுக்க நனைந்து
பித்தாகிக் கிடக்கிறோம்
விழியிலிருந்து சொட்டும் நீரை
நாவால் சுவைக்கிறாய்
சட்டென்று  வெட்டும்  மின்னலில்
புலப்படும்  வாசல் ஒன்று.
எனினும் வெளிச்செல்ல மனமில்லை
இணையுடன் முயங்கிக்
கிடந்த சிற்பம் ஒன்று வெறிக்கிறது
பழுத்த மழையின்  வாசனை 
நாசியெங்கும்  பரவுகிறது 
எங்கும் சொட்டிவிடாமல்
குளிர்  காற்றில் பாதரசமாக
விலகி விலகி இணைந்தோம்
விழி திறந்து பார்க்கையில்
உயிருக்குள் ஒடுங்கிக்
கிடக்கிறாய்
காட்டு யானைகளின் உன்மத்தம்
மரங்களை  முறிக்க
மீண்டும் மீண்டும்
சிலிர்த்து அடங்குகிறோம்
உடலின் பரிசு
இந்த உயிரின் திறப்பு
இக்கணத்தை பரவசத்தை
மடியில் ஏந்தி
உறங்கிவிட்டோம்
மேலும் சிலைகளாகி .!