அலையும் உருவங்கள் - ஜெ.பாண்டியன்




பெய்யாத மழைப் பொழுதின்
காலை நேரப் பேரூந்தில்
செய்திகளை புரட்டிக்கொண்டிருந்தவர்
கற்பழிப்பு கொலை கொள்ளை
கருப்பு பணம் இவற்றிற்கு
தன் காலத்தோடு
ஒப்பிலக்கணம் எழுதிக்கொண்டிருந்தார்
எனக்கும் அவருக்குமான காற்று வெளியில்
நிறுத்தம் வந்ததும்
பேரூந்தின் படியில் நின்று திரும்பிய வேளை
அவரின் உருவத்திற்கு
பேரூந்தின் அத்தனை முகங்களையும்
பொருத்திப்பார்த்துக் கொண்டேன்
பாதம் தரைதொடும் சில நொடிகளில்....