ஸ்ரீரங்கம் - பாலகிருஷ்ண ராமசாமி

The Temple by lostknightkg

அனல் தெறிக்கும் வளி ஏகும்
வாகனங்களைத் தேற்றி ஓடி
வரும் பசுந்    திரள்  காவிரி
தலை நிமிர்ந்தால் அரங்கன் அருள் பாலிக்கக் கோபுரம்
வெடித்த நில மீறி  உயர்ந்த பனைகள்
ஒரு நூறேனின் முறிந்த பனைகளில்
முன் நகர்ந்து குழம்பும் அணில்
எட்டா இலக்கு பனையேறும்
எழுதிய பாம்புகள்
உச்சி வெயில் உலோக முருக
ஒளிரும் காவிரிப் பாலம்
வெடித்த இளமாவின்
முதல் நறுமணம் நாசியில் ஏறும்  
நுழை வாயில்
முன் காலெடுத்து பிச்சை கேட்கும் கோயில் யானை
சிர மேல் கரம் தொட்டு வாழ்த்த
உடல் விரைக்க ஒடுங்கும் சிறுவன்
கற்குவியலில் காணும் சிறு பாம்பு
அடித்துக் கொல்லும் இளம் பட்டர்
ஆயிரம் தலை தூக்கிய சேடன்
பரிவினால் அரங்கன் பள்ளி
ஆண்டுகள் சில நகருமுன்
உறவுகள் தழுவி நின்ற காற்று
நுரையீரல்   நனைக்கும்
முறிந்த பனை போலச் சரிந்து விட்ட சொந்தங்கள்
அரங்கா துயில் நீ எனும் பட்டர் இசைக்க
செவி ஏறும் பண்
உயர் சாளரம் வழி விழி காண
நலுங்கும் கோவிலின் பொற்கலசம்