மத்யமரின் உண்டி - அரிஷ்டநேமி


வாழ்வினில் இன்னும் என்ன இருக்கிறது
தொலைதூர குயில்களின் ஒலி கேட்டு
சந்தோஷங்களுடன் பயணம் தொடரலாம்.
வெட்கங்கள் அற்று
நோயாளியால் வீசி எறியப்பட்ட பீடி
எடுத்துப் புகைக்கலாம்.
'என்னமா நடித்திருக்கான்'
என்று மதிய உணவிற்கு பின்
தொலைக்காட்சிப் படம் பார்த்து
மனைவியுடன் பேசலாம்.
சீர்அசைதளைஎதுகைமோனை
என்று பேசி வயிற்றின் பசியினை
பல நேரம் தள்ளி வைக்கலாம்.
உணவு அற்று  பால் ஈயமுடியாமல்
தன்மடியில் விழும் குட்டிகளை விலக்கும்
பெரு நாயின் வலிகளை உள்வாங்கலாம்.
கடன் வாங்க காத்திருக்கும் நிமிடங்களின்
தனது பெண்ணிற்கு மூக்கு குத்தி
வைர மூக்குத்தி வாங்கும் தகப்பனின் 
சந்தோஷ மனநிலையில் தானும் பங்கேற்கலாம்.
காரணங்கள் அற்று வாழ்வில் வரும் வலிக்காக
குளியல் அறையில் அழுது நீர்த்துப் போகலாம்.
அழிவுறு பொருள்கள் மேல்
மனிதர்களின் மாறா விருப்பம் கண்டு வியப்பு கொள்ளலாம்.
உறக்கும் குழந்தைகள் பார்த்து
அவைகளின் எதிர்காலம் குறித்து
அச்சப்பட்டு உறக்கம் தொலைக்கலாம்.
யாரும் அற்று வீதியினில் வலம் வரும்
மனநலம் குன்றிய பெண்
தன் வயிற்றில் வளரும் கருவினை
தடவிப் பார்ப்பது குறித்து வருத்தம் கொள்ளலாம்.
இன்னும் என்ன இருக்கிறது
மத்யமராய் வாழ்ந்து இயல்பாய் மரித்தல் தவிர.

* 
மத்யமரின்  உண்டி - மத்யமரின்  இன்ப துன்ப நுகர்வு