பின்பனிக்கால கவிதைகள் - 2 - லீனா மணிமேகலை



   

1.    எனது வார்த்தைகளை
   உனக்கு இளைப்பாறத் தருகிறேன் 
   அதில் டால்ஸ்டாய் எங்கே எனக் கேட்காதே
   சற்றுப் பொறுமையாகப் பார்
   மாங்கன்றுகளை நட்டிருக்கிறேன்
   கூடு வைக்க தூக்கணாங்குருவிகளை
   அழைத்திருக்கிறேன்
   சிறிதுகாலம் கு.அழகிரிசாமி
   இளைப்பாறியிருந்தார் தெரியுமா
   அப்போதெல்லாம் அவர் கனவில்
   கமலாதாஸ் வந்ததாகவும் சொல்லிக்கொண்டிருந்தார்
   பிரமிள் தன்னுடைய வார்த்தைகளாக மாற்றிக்கொள்ள
  முடியாததால் கோபித்துக்கொண்டு வெளியேறிவிட்டார்
  உனக்குப் பிடித்த வார்த்தைகளில்  ஊஞ்சலைக்  கட்டிவிடுகிறேன்
  நித்திரை வை
  சிறுவயதில் நீ கடலில் பிடித்து விட்ட நண்டுகள்
   திரும்பி வரலாம்
  ஃ ப்ரீடா போல நீ ஆசை ஆசையாய் வரைந்துப் பார்த்த
  முதல் காதலி புன்னகைக்கலாம்
  அணைத்துக்கொள்
   வார்த்தைகள் உனதாகலாம்

2. காதல் வேண்டும்
காதலின் முதல் பருவத்துக்
காதல் வேண்டும் குடித்து முடித்தும் தளும்பிக் கொண்டிருக்கும்
திராட்சை ரசம் போல


3. நாம் பயணம் செய்த படகை உனக்கு நினைவிருக்கிறதா அதன் ஓட்டையை திறந்து விடுவதும்
நீரை இறைத்து வெளியே 
ஊற்றுவதுமாய் மாறி மாறி
நாம் விளையாடிக் கொண்டது நினைவிருக்கிறதா நேற்று கடல் சொல்லிக்காட்டியது


4. காபூலின் மாதுளம்பழ காடுகளில்
நடந்துக் கொண்டிருக்கும்போது
உனக்கு முத்தமிட்டதாக கனவு கண்டேன். அப்போதும் மேற்கு தொடர்ச்சி மலைகளில்
மேய்ந்துக் கொண்டிருந்த வரையாட்டின் கண்கள்
நம்மைப் பார்த்துக் கொண்டிருந்தன


5. என் ஆன்மாவின் அடிவாரத்தில்
திரவமாக ஓடிக்கொண்டிருக்கிறாய்
உரையாடும் கணம் தோறும்
அதில் சுழியும் வட்டங்களில்
கெண்டை மீன்களாக
உன் கண்கள் துள்ளுகின்றன

 6.     குறிப்பாக
    உன்னைப் போதுமான அளவு
    முத்தமிடவில்லையென்ற
    புகாரில்லாமல்
    இறக்க விரும்புகிறேன்


7.   நான் தொலைவு
   நான் மறதி
   நான் பிளந்த மௌனம்
   நான் கைவிடல்
   குகையின் குறுக்குவெட்டைப் போன்ற 
   என் மோனம்  கண்ணீர் அற்றது 
   எதிரொலி தொலைத்தது

8.     அந்த ஆற்றுப் படுகையில்
    என் காதல்களைப் புதைத்து வைத்திருக்கிறேன்
    உன் கைகளில் அகப்படும் மண்
    உன்னுடையது
    நம்முடையது

9.    என் பொறாமையைக் கண்டு விசனம் வேண்டாம்
    அது பசி தாளாமல் அழும் குழந்தை போன்றது