பாரதி தெரு
மூன்றாவது குறுக்கு சந்தில்
ஐந்தாவது வீட்டில் தான்
இருக்கிறது
அச்சம் என்னும் இரண்டு நாய் குட்டிகள்
அதற்க்கு வழக்கமான
நாய்களை போல்
வால்களும் இல்லை
அத்துடன்
அவைகளுக்கு குரைக்கவும்,
கவ்வி இழுக்கவும்,
அவ்வளவாய் பழக்கமில்லை
எத்தனை நீளமான
எலும்பு துண்டுகளையும்
அவைகளுக்கு கடித்து
துப்ப தெரியாது
அவைகள் எந்நேரமும்
அவைகளாகவே
இருப்பதில்
அவைகளுக்கே ஓர்
பேரானந்தம்
இது போன்ற தன்னிலை
மறவா நாய்க்குட்டிகளை தான்
எனது மகளுக்கோ அல்லது
இன்னபிற
நண்பர்களுக்கோ
பரிசளிக்க விரும்பி
அதை
கயிறுகள் இருக்காமல்
வாங்கி வைத்திருக்கிறேன்
யாரேனும் அல்லது
என் மகளே
அதற்க்கு பெயர் சூட்ட
விரும்பும் பட்சத்தில்
அச்சம் என்னும்
இரண்டு
குட்டிகள் என வைத்தாலே
போதும் என்பேன்.