இறுக்கம் - ஜெ.பாண்டியன்





இரண்டுநாள் மழை ஓய்ந்த 
காலைப்பொழுதின் ஐந்தரை மணி
இருக்கைகள் நிறைந்திருந்த 
சென்னை நகரப் பேரூந்தில் 
"நினைப்பதெல்லாம்.... நடந்துவிட்டால்.....
தெய்வம்.. ஏதுமில்லை....."
என்ற பீபி.சீனிவாசின் குரலுக்கு 
எதிர்மறையான இறுக்கத்தை 
சுமந்தவர் முகத்தை 
குளிர்காற்று தன்தொழில் மறந்து 
விலகிப்போனதும்
பாடல் வரிகளும் 
பார்...மகளே....பார்..
என மாறிப்போனது....

இன்னொரு மழைநாளின் 
காலைப்பொழுதின் ஐந்தரை மணி 
நெல்லை-தென்காசி பேரூந்தில் 
ஒலித்த 
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் 
வாசல் தோறும் வேதனை இருக்கும்"
என்ற பீபி.சீனிவாசின் குரலுக்கு 
முருகேசன் அண்ணாச்சி
உதிர்த்த சிரிப்பில் 
அவரின் இறுக்கமும் தணிந்திருக்கக்கூடும்...