இன்மை - கவிதைக்கான இணைய இதழ்

Showing posts with label ஆசிரியர் பக்கம். Show all posts
Showing posts with label ஆசிரியர் பக்கம். Show all posts

ஆசிரியர் பக்கம் – ஆர்.அபிலாஷ்

அகரமுதல்வன்: தீவிரமும் இசைமொழியும்

Image result for அறம் வெல்லும் அஞ்சற்க 

23 வயதாகும் ஈழக்கவிஞர் அகரமுதல்வன் மூன்று தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். அவர் வயதில் நாம் காதலையும் உணர்ச்சி குழப்பத்தையும் கற்பனாவாத கனவுகளை எழுதிக் கொண்டிருந்தோம். எனக்குத் தெரிந்தே பலர் முப்பதுகளில் தான் தீவிரமான எழுத்து நோக்கி நகரவும் கவிதையில் நிலைப்படவும் முயல்கிறார்கள். ஆனால் அகரமுதல்வன் வாழ்க்கையை தொட்டுத் தடவி அறியத் துவங்க வேண்டிய வயதிலேயே வதைமுகாம் அனுபவங்கள், சிதைந்த உடல்கள், கைவிடப்பட்ட குழந்தைகள், நடுக்கடலில் மரணத்தை நோக்கி வெறித்தபடி அமர்ந்திருக்கும் அகதிகள், வல்லுறவின் கடும் வலியின் மத்தியில் பழிவாங்கும் வெறியுடன் யோசிக்கும் பெண் போராளிகள் பற்றி பேசுகிறார். எந்த இந்தியத் தமிழனும் கற்பனை கூட செய்ய முடியாத அநீதிகள், கொடூரங்கள், உடலும் அறமும் முழுக்க அடையாளமற்று சிதைந்து போன சூழல் என பலவற்றை கண்டு கடந்து வந்திருக்கிறார். இது அவரை நாம் எவரையும் விட முதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. நான் ஆன்மீக, தத்துவ முதிர்ச்சியை சொல்லவில்லை. நாற்பது வயதில் ஒரு மனிதன் வாழ்க்கை பற்றி கொள்ளும் நம்பிக்கை வறட்சியும் எந்த தோல்வியையும் ஏற்கத் துணியும் மூர்க்கமும் அவரிடம் இந்த வயதிலேயே தோன்றி விட்டதைக் குறிப்பிட்டேன்.

அகரமுதல்வனிடம் நம் சமகால கவிதைக்கு விதிவிலக்காக ஒரு இசை லயம் உள்ளது. உச்சாடன தொனியுடன் – சற்றே என்.டி ராஜ்குமார் போல் – எழுதுகிறார். அறம் வெல்லும் அஞ்சற்க தொகுப்பில் உள்ள இவரது சில கவிதைகள் மேடையில் படித்தால் அதன் அர்த்தம் தவிர்த்து வெறும் ஓசையே கூட நம்மை உணர்ச்சிவசப்பட வைத்து விடும். ஆனால் வைரமுத்து, மு.மேத்தாவிடம் காணும் வெற்று அலங்கார ஓசைகள் அல்ல இவை. கவிதைக்கு ஆதாரமாய் உள்ள உணர்ச்சியை ஓசை வழியாகவும் மேலெடுத்து வாசகனை கிளர வைக்க இயலும். அதையே அகரமுதல்வன் செய்கிறார். அவர் வானம்பாடிகளைப் போல எதுகை மோனையை அதிகம் பயன்படுத்துவதில்லை. ஆனால் என்.டி ராஜ்குமாரைப் போல் சொற்களின் மாத்திரை அளவை சரியாய் உணர்ந்து அவற்றை கோர்ப்பதன் வழி மத்தள இசையை திரியில் சுடர் ஏற்றுவது போல் உருவாக்குகிறார்.

“நடுங்கிடும் சூரியனின் பயத்தை
வெடித்துப் போன நிலாவை
ஒளிந்து கொள்ளும் நட்சத்திரங்களை
உற்று நோக்கியபடி நிர்வாண சோதனைக்கு ஆட்பட்டிருந்தோம்”
எனும் வரிகளின் உள்ளார்ந்த தாளத்தை, அது அவ்வரிகளில் உருவாக்கும் பதற வைக்கும் வதைமுகாம் சித்தரித்துடன் பொருந்திப் போவதை கவனியுங்கள்.

அகரமுதல்வன் நம்மைப் போல் அன்பு, நீதி, மன்னிப்பு, தனிமனித உரிமை ஆகிய இருபதாம் நூற்றாண்டு, உலகப்போருக்கு பிந்தைய விழுமியங்களை நம்புவதில்லை. வ.ஜ.ச ஜெயபாலன், தீபச்செல்வன் போல் இவரும் ஒரு “போர்க்கவிஞர்”. களத்தில் அழியும் உடலை அவர் இழப்புணர்வுடன் பார்த்து இரங்குவதில்லை. வீழும் உடல் விதையாய் முளைத்து பழிவாங்கலுக்கு புது ஆயுதமான உருமாறும் என நம்புகிறார். இந்த நம்பிக்கையை அவர் அப்பட்டமாய் அன்றி நுணுக்கமாய் உணர்த்துகிறார். தன் சொற்களில், உருவகங்களில் ஒளித்து வைக்கிறார். கீழ்வருவதை கவனியுங்கள்:
“முன்னர் படகொன்றில்
புகலிடம் தேடி காணாமல் போனவர்களின்
குருதிகள் அலை அலையாய் எழுவதாய் தோன்றும்
கடல்வெளியில் சவக்குழி மணம் எங்கும் நீந்த
அவலப் பாடலை தேம்பித் தேம்பி பாடுகிறார்கள்
ஆதிமொழியில்
நிச்சயம் இவர்களும் ஈழத்தமிழரே”

இரண்டு விசயங்கள் முக்கியம் இங்கு. ஒன்று குருதி கடல் அலைகளாய் ஆர்ப்பரிப்பதாய் வரும் உருவகம் சக்தி வாய்ந்தது. கூர்மையானது. தமிழ்ச் சூழலில் இப்படியொரு உருவகம் கற்பனை பண்ண முடியாதது. அடுத்தது இப்பத்தியில் “ஆதிமொழி” முக்கியமான திறப்புச்சொல். அழிவின் விளிம்பில் ஈழத்தமிழர் பாடுவது ஆதிமொழி எனும் போது அவர்களின் கூக்குரல் அவலக்குரலாய் அல்லாமல் அடையாளப்போரின் நெடுங்கால முழக்கமாய் மாறுகிறது. இது போல் சட்டென ஒரு சொல் அல்லது உவமை, உருவகம் மூலம் கவிதையின் நிறத்தை மாற்றக் கூடியவர் அகரமுதல்வன்.

எங்கிருந்து ஆரம்பிக்கிறது தனது நிழல் என வினவும் சுந்தர ராமசாமியின் கவிதை நினைவிருக்கும். நிழல் எப்போதுமே கவிதையில் பிரக்ஞையின் குறியீடாய் தோன்றுகிறது. வெளிச்சம் உள்ள இடத்தில் நிழலில் இருந்து தப்ப இயலாதது போல மனிதனால் தனது சதா யோசிக்கும் மனதிடம் இருந்து தப்ப முடிவதில்லை. அகரமுதல்வன் இந்த குறியீட்டுக்கு முழுக்க வேறொரு தீவிர, போர் சார்ந்த நிறத்தை அளிக்கிறார்:
“ரத்த நிறத்திலொரு நிழல்
வன்மம் பீறிட்டு வழிய
நூற்றாண்டுகளுக்கு மேலாக படர்கிறது”

எங்கு சென்றாலும் குருதி பின் தொடரும் ஒரு பிறவியாக ஈழத்தமிழன் இங்கு தோன்றுகிறான். எப்படியான ஒரு துர்விதி இது?

இவரது சித்திரவதைக் கவிதைகள் வித்தியாசமானவை. நமது அரசியல் எழுத்துக்களில் உடல் மீதான வன்முறை ஒடுக்குமுறையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. சித்திரவதை நிறுத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே நம் கோரிக்கையாக இருக்கும். பூக்கோவின் தாக்கம் காரணமாய் சித்திரவதையோ மரண தண்டனையோ சமூகத்தை மறைமுகமாய் ஒடுக்குவதற்காய் அரசு செய்யும் காட்சிபூர்வ வன்முறை என்ற அளவில் தமிழில் பேசப் பட்டுள்ளது. ஆனால் அகரமுதல்வனின் கவிதைகளில் வன்முறை, பலாத்காரம், சித்திரவதை ஆகியன பதில் தாக்குதலுக்கு முன்பான பின்னடைவு மட்டுமே. கடுமையாய் நசுக்கப்படும் ஒருவன் தனது சிதைவுறும் உடல் என்பதை நாளை எதிரியை தன் மக்கள் திரும்ப தாக்குவதற்கான முகாந்திரமாய் மட்டுமே பார்க்கிறான். ஒரே நேரம் எதிரியின் தாக்குதலுக்கு உள்ளாகும் உடல் எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் மாறுகிறது:

”துயரார்ந்த கோடை காலத்தில்
நடுங்கியபடி
நான் சரணடைதலை நிகழ்த்த
பீறிட்டு வெளியே வரும் வன்மங்களோடு
எனக்கான விசாரணை
தொடங்குகிறது…
எனது ஜீவிதம் நிறைவாக்கப்படும்
வீர மரணத்தை எதிர்பார்த்து
இன்னும் என்னென்ன நடக்குமென்று
ஒரு பட்டியலை மனதற்குள்
போடுகிறேன்…
நாயகன் களத்திடை வீழ்ந்தது உறுதியானது
ஏ.கே 47ன் வீரியம் பற்றி
ஆடையொன்றுமில்லாமல் எழுதிக்
 கொண்டிருக்கிறேன்
நான் இழக்கும் குருதிகளால் வலுப்பெற
அக்காவின் குழந்தைகளுக்கு கவிதை”

போராளி சிந்தும் குருதி போராட்டத்தை வளர்த்தெடுக்கும் எனும் நம்பிக்கை இன்று நீர்த்து விட்டது. உடல் மீதான வன்முறையில் பாதிக்கப்படுபவருக்கு எந்த பலனும் இல்லை, உடல் ஒடுக்குபவனின் கையில் ஒரு ஆயுதமாய் மாறுகிறது என்பதே பின்நவீனத்துவ நம்பிக்கை. இடதுசாரிகள் கூட இன்று ரத்தசாட்சிகள் பின் திரளுவதில்லை. ஆனால் அகரமுதல்வன் போராளியின் குருதியை போராட்டத்துக்கான எரிசக்தியாக பார்க்கிறார். உலகப்போருக்கு முன்பான, பின்நவீனத்துவ சிந்தனைகளுக்கு முன்பான மனநிலை இது. இதில் எந்த குற்றமும் உள்ளதாய் நான் கூறவில்லை. அமெரிக்க ராணுவத்தில் கோட்பாட்டு பிடிப்பின்றி பங்கெடுக்கும் ராணுவ வீரனுக்கு ஏற்படும் கசப்புணர்வும் அவநம்பிக்கையும் வெறுமையும் வியட்நாமில் தன் இருப்புக்காய் போராடும் போராளிக்கு இராது. போரில் பங்கெடுப்பது வேறு வெளியில் இருந்து போரினால் பாதிக்கப்படுபவர்கள் வேறு. உதாரணமாய், சித்தாந்தன் இரண்டாம் வகையினருக்கான கவிதையையும் (ஷோபா சக்தி அவர்களுக்கான புனைவையும்), அகரமுதல்வன், தீபச்செல்வன் போன்றோர் முதல்வகையினருக்கான கவிதையையும் எழுதுகிறார்கள். இரண்டாம் வகையினர் போரைப் பற்றி சமகால சிந்தனையுடனும் முதலாம் வகையினர் நானூறு வருடங்களுக்கு முந்தைய பார்வையுடனும் இருக்கிறார்கள் எனலாம். ஈழத்தில் உள்ள சூழல் காலத்தை நானூறு வருடங்களுக்கு முன்பாக தள்ளி விட்டது என்றும் பார்க்கலாம்.

உடல் ரீதியான வன்முறையை கொண்டாடும் இக்கவிதைகளில் ஒன்றில் அவர் கவிதை எழுதுவது என்பதே மொழியை கொல்லுவது தான் என்கிறார்.
“கருணையென்பது சிறிதளவுமின்றி
எனக்கு முன்னர் தோன்றிய
சொற்களை கொலைப்படுத்தி
கவிதையென்றழைக்கிறேன்”
கொல்லுவது போதாதென்று அவன் மொழியை சிதைக்க, வதைக்க ஏங்குகிறார்.
“என் மரணத்துக்கு பின்னான
ஒரு மழைநாளில்
அளவிட முடியாத கொலையுணர்வோடு
மீண்டும் மீண்டும் சொற்களை கொன்றிருந்தேன்”

கொலையை அவர் ஒருவித விவசாயமாய் பார்க்கிறார். அதை வெற்றியை அறுவடை செய்யும் உடல் மீதான விவசாயம் என்கிறார். இவ்வரிகளை கவனியுங்கள்:
“துப்பாக்கி செடியை
உயிர்முழுவதும் விதைத்து செல்லும்
வன்முறை விவசாயிகளால்
தடயமின்றி சுகவீனமாகிப் போவதைத் தவிர”
எதிரியின் தோட்டாக்கள் இங்கு ஈழப்போராட்டத்தின் விதைகளாய் மறு உருவெடுக்கின்றன. ரவைகளால் துளைக்கப்பட்ட உடலை விவசாய நிலமாய் வேறு யாரும் - உலகக்கவிதையில் கூட - சித்தரித்ததாய் நினைவில்லை.

அன்பும், நிராசையும், அபத்தமும், அரசியல், தத்துவ, அற விசாரமும் சமகால இந்திய தமிழ்க்கவிதையில் பிரதானமாய் இருக்கையில், அகரமுதல்வனின் வரிகளின் அடிநாதமாய் இருப்பது மேற்சொன்னவற்றை நிராகரித்துச் செல்லும் “கொலையுணர்வு” தான். அதாவது கடும் வன்முறையை சித்தரிக்கும் நமது தலித் கவிதைகளில் கூட இந்த கொலையுணர்வு இல்லை. காரணம் நாம் ஒரு ஜனநாயக தளத்தில் இருக்கிறோம். அகரமுதல்வன் ஜனநாயகம் இறந்த, சர்வாதிகாரம் மட்டுமே சாத்தியமுள்ள ஒரு மண்ணில் நின்று எழுதுகிறார்.
நிலத்தை இவர் தொடர்ந்து பெண்ணுடலாகவே சித்தரிக்கிறார்.

“பெரும் மெய்மையற்ற ஊழி
வீரியமில்லாத இருள்மையால்
நிலத்தை புணர்ந்தபடி இருக்கிறது”
விதியை ஆண்மையற்ற காதலனாகவும், அவனது வெற்றுப்புணர்ச்சிக்கு அர்த்தமற்று இடம் அளிப்பவளாக ஈழ அரசியலையும் காட்டுகிறார்.
நேர்மாறாய், வீரம் செறிந்த போராட்ட சூழல் என்பது பெண் எனும் நிலத்தில் வீரியமிக்க ஆண் செய்யும் புணர்ச்சியாக உள்ளது:

“…கண்ணுறங்கும் காலத்தை
காவலரண் ஒன்றை கருத்தரிக்க செலவு செய்
எழுந்து வருகிறது வெள்ளரசு
தமிழ் விழுதுகள் வீழ்த்த”

“இன்னும் போராடும் இசைப்பிரியா” எனும் கவிதையில்
”இனவெறியை கர்ப்பம் தரித்து
கொலைகளை பிரசவிக்கும் நிலமொன்றில்”
எனும் போதும் பெண்ணுடல் செயலற்ற நிலையில் ஆணின் கருவியாகத் தான் இருக்கிறது. இசைப்பிரியாவின் வல்லுறவு காட்சியை சித்தரிக்கும் போது அகரமுதல்வன் அங்கு அவலத்தையோ வேதனையோ முன்னிறுத்தாமல் வீரத்தையும் போராட்ட நம்பிக்கையையும் வலியுறுத்துகிறார். ஒருவிதத்தில் அவர் இந்த பலாத்காரத்தை போராட்டத்தின், போரின் அன்றாடப் பகுதியாக, குண்டு படுவது, கைகாலை இழப்பது போல, பார்க்கிறார்.

”குருதிப்பிரியர்களால் துயிலுரியப்பட்டவள்
அவயங்களைக் கீறிய மிருகங்களின் முகத்தில்
காறி உமிழ்ந்து மரணத்தை அழைத்திருப்பாள்”

”காறி உமிழ்ந்து மரணத்தை” அழைக்கிறார் இசைப்பிரியா. அவர் வேதனை பொறுக்காது கூக்குரலிடவில்லை. தில்லியில் கொடூரமாய் பலாத்காரம் பண்ணப்பட்டு கொல்லப்பட்ட நிர்பயா பற்றி நமக்கு கிடைத்த, நாமே உருவாக்கிக் கொண்ட சித்திரம் முற்றிலும் மாறுபட்டது. பொதுவாய் இந்தியாவில் பெண் மீதான பாலியல் வன்முறை பலவீனர்கள் மீதான ஒடுக்குமுறையாய் பார்க்கப்படுகிறது. அகரமுதல்வன் இங்கு இசைப்பிரியாவை பாதிக்கப்பட்டவராய் காட்டுவதை தவிர்க்கிறார். அவருக்கு பெண்ணுடல் அனுபவிக்கும் கொடுமைகள், அவமானங்களை விட அது எதிர்வரும் போராட்டத்திற்கு எப்படியான முகாந்திரமாகப் போகிறது என்பது தான் முக்கியமோ என எண்ணத் தோன்றுகிறது.
பெண்ணுடலை இது போன்று இந்திய தமிழ்க்கவிதையில் சித்தரிப்பது இன்று கற்பனை செய்ய முடியாதது. அப்படிச் செய்யும் கவிஞனை பெண்ணியவாதிகள் ஊறுகாய் போட்டு விடுவார்கள்.

அகரமுதல்வனுக்கு பெண்ணுடல் மட்டுமல்ல பிரபாகரனின் உடல் கூட வெறும் கருவி தான் என்பது “தலைவன் என்பவனும் தசைகளின் கூட்டுறவே” எனும் கவிதையில் தெரிய வருகிறது. மரித்து கடலடியில் மீன்களால் உண்ணப்படும் தலைவரின் உடலை மறந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இறந்த மறுநொடி பிரபாகரனின் முக்கியத்துவம் இல்லாமல் ஆகி விடுகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்க் கவிதை வெகுவாக எளிமைப்பட்டிருக்கிறது. அனுபவங்களை நேரடியான மொழியில் எழுதுவது, பெரும்பாலும் உருவகங்களை தவிர்த்து உவமைகளை பயன்படுத்துவது, குறியீடுகளை நெற்றியில் பொட்டு போல பயன்படுத்துவது தான் இப்போதைய போக்கு. மாறாக அகரமுதல்வனின் கவிதை இடுப்புக் கச்சையிலும் வாளிலும் ஏகப்பட்ட மணிகளை கோர்த்து கிலுகிலுவென துள்ளும் கேரளாவின் சாமியாடிகளைப் போல் நம் முன் வருகிறது. ஒவ்வொரு சொல்லுக்கு பின்னும் ஒரு உருவகம் கோர்க்கிறார். இது அவரது கவிதையை படிக்க சிரமமாக்குகிறது. கீழ்வரும் பத்தியை பாருங்கள்:

“பூதைகுழி வாழ்வின் பூரண மடியில்
பரவி வீழும் நீதியின்மைகள்
இரக்கக் கீற்றுகளற்று
தொடர் யுகக் கொலை நிகழ்த்தும்
புரியாத மரண சமிக்ஞை
லாடங்களில் படர
நாடோடிக் குதிரைகளென
எங்கேனும் வாழப் பழகி
குளம்படிக் காயங்களோடு
இருண்ட எல்லை நோக்கி
விரைந்து
டோலருக்குள் மறைகிறோம்”

புதைகுழி வாழ்வு, இரக்கக் கீற்று, குளம்படிக் காயம், டோலர் என ஒரு நீண்ட வாக்கியத்துள் நான்கு உருவகங்களுக்கு மேல் வருகிறது. இப்படி சரம் சரமாய் வரும் உருவகங்கள் குறைந்தால் அவரது கவிதைக்குள் வெளிச்சம் அதிகமாகும்.
கீழ்வருவது போன்ற மிகவும் காட்சிபூர்வமான அட்டகாசமான வரிகளையும் அகரமுதல்வன் அங்கங்கே எழுதுகிறார்.
“மழையடித்து குமுழியிடுகிற ஊற்றில்
நட்சத்திரங்கள் தோன்றித் தோன்றி மறைய
இரவுப்புதர்களால் நகரத் தொடங்கின
நிலங்களை களவாடும் இனவாத மிருகங்கள்”
இவ்வரியில் மூன்று விதமான சலனங்கள் வருகின்றன. மழையில் குமிழியிடும் நீர்நிலை, குமிழிகள் மத்தியில் தோன்றி மறையும் நட்சத்திர பிரதிபலிப்பு, இவையிரண்டையும் போன்றே மாய்மாலமாய் நகர்ந்து சூழும் எதிரிப்படையினரின் “இரவுப்புதர்கள்”. இரவின் சிறுசிறு அசைவுகளும் அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் மெல்ல மெல்ல உச்சநிலைக்கு கொண்டு போகிறவை. தாக்குதல் எனும் ஒரு பெரிய அசைவை காட்ட இது போன்ற பீதியூட்டும் சிறு அசைவுகளை சித்தரித்தால் போதும்.

அகரமுதல்வனின் சிறப்பு அவரது சரளமான, காட்சிபூர்வமான உருவக மொழிதான். மிக நுணுக்கமான உணர்வுகளை தீவிரமாய் கண்முன் கொண்டு வர அவரால் இயல்கிறது. உதாரணமாய் உடலுக்குள் புதைந்து அரிக்கும் காமம் பற்றின இச்சித்தரிப்பை பாருங்கள்:
“முத்தங்கள் விரிக்கும் காமத்தின் நாகம்
ஸ்பரிசங்களுக்குள் புற்று எழுப்பியிருந்தது”

அல்லது காதல் நினைவுகளைச் சுட்டும் இந்த உருவகத்தை கவனியுங்கள்:
“பொழிந்து கொண்டிருக்கும் மழையில்
அசைந்தபடி செல்லும் தூறலின் அமிழ்தம்
இலைகளில் தொங்கி என்னில் படுகிறது
மாயங்கள் மரித்த பிம்பங்களின் முத்தமிடலோடு”
மழை பெய்த பின் மரக்கிளைகளின் கீழ் நிற்கும்/நடக்கும் எவரும் சில்லென ஒரு துளி எதிர்பாராது கன்னத்தில் விழுந்து தீண்டும் போது திடுக்கிடுவோம். அது சட்டென நம் மனநிலை மாற்றி நினைவுகளை புரட்டிப் போடும். அது போன்று, காதல் பற்றின சிந்தனையின் போது ஏதாவது ஒரு நினைவு, ஒரு சொல், ஒரு வாசனை நம்மை மனம் குலைய வைக்கக் கூடும்.

”அச்சமடையத் துவங்கும் இரவுப் பொழுதுகளில்
யுத்தவெளியின் குருதிக் கறைகளை
தீராக் கனவுகளில் வரித்து தூங்குகிறோம்”
போன்ற மிக உக்கிரமான வரிகளையும் அவர் உருவாக்குகிறார்.
அகரமுதல்வனின் முக்கியமான பலவீனம் வடிவச் சிதறல் தான். அவரது கவிதைகள் பாதரசத்தை தரையில் சிந்தினாற் போல் உள்ளன. பல அழகான கவிதைகள் ஒரு புள்ளியை நோக்கி நகராமல் தனித்தோடுகின்றன. சில கவிதைகளில் மைய உணர்ச்சியில் இருந்து விலகி விவரிப்புகள், கூற்றுகள், சித்தரிப்புகள் என கவனம் சிதறி வடிவ நேர்த்தியை இழக்கிறார். கவிதை அடிப்படையில் மென் உணர்ச்சிகளால் ஆனது. அதன் மென்மையான உடல் பாரமான உருவகங்கள், குறியீடுகளை அளவுக்கு மேல் அடுக்கினால் தாங்காது. இன்னும் கச்சிதமாய் திருத்தி தேவையற்ற உருவகங்களை நீக்கும் பட்சத்தில், எளிய வரிகள் மூலம் உக்கியமான உணர்ச்சிகளை சித்தரிக்க அவரால் இயலும். உடலுறவில் போல கவிதையிலும் உச்சகட்டம் ஒருமுறை தான் நிகழ வேண்டும். அதுவரை சன்னமான, எளிய நேர்த்தியான இயக்கம் போதும். அகரமுதல்வன் இந்த சமநிலையை விரைவில் அடைவார் என எதிர்பார்ப்போம்.


இந்த நூலை இவ்வளவு அழகாய், நேர்த்தியாய் வெளியிட்டுள்ள சாய்ராம் பதிப்பகம் மற்றும் யாவரும்.காமை நிச்சயம் பாராட்ட வேண்டும். கவிதைத்தொகுப்புகள் இவ்வளவு கவனமுடன் தயாரிக்கப்படுவது அரிது தான்.

ஆசிரியர் பக்கம்

விக்கிரமாதித்யன்: நைட்டியில் தோன்றும் கவிதைகள்
- ஆர்.அபிலாஷ்

Image result for விக்கிரமாதித்யன்

தமிழில் இருவகையான கவிஞர்கள் உண்டு. கவனிக்கப்பட்டு விரிவாக விவாதிக்கப்படுபவர்கள். பிரமிள், தேவதச்சன், தேவதேவன் போல. ஆர்வமாய் பரவலாய் வாசிக்கப்பட்டு, ஆனால் விமர்சன ரீதியாய் பொருட்படுத்தப்படாதவர்கள். விக்கிரமாதித்யன் இரண்டாவது வகையில் வருகிறார். இறுக்கமாய், ஒரு சொல் கூட மிகாமல், முறுக்கி முறுக்கி, பூடகமாய் கவிதை எழுதப்பட்ட காலத்தில் அவர் கவியுலகம் திறந்து விட்ட ஜன்னலைப் போல் ஏராளமான காற்றை வாசகர்கள் நோக்கி அனுப்பியது. அவர் எழுதியவை திறந்த பாணியிலான கவிதைகள். மிகுந்த சரளத்தன்மையும் வாசகனிடம் உரையாடும் தொனியும் கொண்டவை. அன்றாட வாழ்வின் குறிப்புகள், மத்திய வர்க்க வாழ்க்கையின் அலுப்பு, வேலையும் குடும்பப்பொறுப்பும் கிளிக்கூண்டைப் போல் தன்னை பூட்டி வைத்து விடுமோ எனும் பதற்றம், அரசல்புரசலான தத்துவத் தெறிப்புகள் இவற்றின் கலவையாய் அவர் கவிதையின் பாடுபொருட்கள் இருந்தன. அவ்விதத்தில் அவர் கவிதைகள் அமெரிக்க கவிஞர் புக்காவஸ்கியினுடையவை போன்றவை.

 பெரும்பாலும் விக்கிரமாதித்யன் எழுதுபவை புலம்பல்களாய், அறிக்கைகளாய், காலண்டர் தாள் தத்துவங்களாய் இருப்பதுண்டு. அவர் ஏராளமாய் எழுதியிருக்கிறார். தினமும் எழுதுபவர்கள் உரை எழுத்தாளர்களாய் இருப்பது நலம். அல்லாதபட்சத்தில் கவிதையில் நிறைய குப்பை சேரும். அப்படியான குப்பைகளையும் விக்கிரமாதித்யன் எழுதிக் குவித்திருக்கிறார். அவற்றின் இடையே சில அற்புதமான கவிதைகளையும், கவிதை ஆகும் முயற்சியும் நின்று போன நல்ல படைப்புகளும் இருக்கும்.

விக்கிரமாதித்யனிடம் உள்ள நேரடித்தன்மை, லகுவான வாசிப்பனுபவம், அதிர்ச்சி மதிப்பு, எதிர்க்கலாச்சார கூறு ஆகியன வாசகர்களை ஈர்ப்பன. குறிப்பாய் ஆரம்பநிலை வாசகர்கள். சொல்லப்போனால் எப்படி தீவிர புனைவு வாசிப்பை தி,ஜாவிடம் இருந்து துவங்கலாமோ அது போல் தீவிர கவிதை வாசிப்பை நான் விக்கிரமாதித்யனிடம் இருந்தும் துவங்கலாம்.
விக்கிரமாதித்யனின் முக்கியமான சிறப்பாக எளிமையை சொல்லலாம். அதாவது கருத்தாழமுள்ள எளிய வரிகளை அவரால் எழுத முடியும். அதுவும் பல குட்டிக்கவிதைகளில் அவர் உருவாக்கும் மாயம் வியக்கத்தக்கது. இந்த இரு வரிக் கவிதையை பாருங்கள்:
“இருட்டுக்கு
நட்சத்திரங்கள் நிறைய”
இருட்டைச் சுற்றி இத்தனை நட்சத்திரங்கள் எதற்கு? அவற்றால் இருளை வெளிச்சமாக்க முடியாதல்லவா? அவை வெறுமனே இருளுக்கு துணையிருக்கின்றன. இருளுக்கும் பயனின்றி, அவற்றுக்கும் பயனின்றி. இது போன்று எவருக்கும் பயனின்றி பல நல்ல விசயங்கள் நடந்து முடிந்து சாம்பலாவதுண்டு. அதைச் சொல்வதாக இக்கவிதையை பார்க்கலாம். இக்கவிதையின் மையம் “நிறைய” எனும் அழுத்தம் தரும் சொல்லில் இருக்கிறது. எவ்வளவு நிறைய? நிறைய நிறைய. வாழ்க்கை இருட்டாக உள்ள ஒரு எழுத்தாளனை, கவிஞனை, கலைஞனை எடுத்துக் கொள்ளுங்கள், அவன் தன் படைப்பாக்கம் மூலம் தன்னைச் சுற்றி வெளிச்சமாய் நிறைய பெருக்கிக் கொள்கிறான். ஆனாலும் இருள் தான் அவன் நிதர்சன நிலை. தன்னை அந்நிலைக்கு இழக்காமல் இருக்க பக்கத்தில் வெளிச்சத்தை பெருக்கி வைத்து அதில் அவன் காய்கிறான். இருட்டுக்கும் பலியாகாமல் வெளிச்சத்துக்கும் முழுக்க தன்னை ஒப்புக் கொடுக்க முடியாதவன் தான் ஒவ்வொரு கலைஞனும். அவனுக்கும் இரண்டும் தேவையாக உள்ளது. இப்படி இக்கவிதைக்கு எண்ணற்ற அர்த்தங்கள் கொடுக்கலாம்.

விக்கிரமாதித்யனால் எளிய அன்றாட வாழ்க்கைச் சித்திரம் ஒன்றை கசப்பு சொட்டும் படிமமாக மாற்ற இயலும். இக்கவிதையை பாருங்கள்:

வேலையில்லாதவன்
கைலியுடுத்திக்
கிழிக்க
வெள்ளைச்
சேலையுடுத்திக்
கிழிப்பாள் விதவை
சமைந்தவள்
தாவணி போட்டுக்
கிழிக்க
கலருடுத்திக்
கிழிப்பாள்
கல்யாணமானவள்
கிழியக்
கிழியக்
கிழிசல்
பழந்துணியாகி
வீடு மெழுக
இட்லித் துணியாக
சட்டிபிடித் துணியாக
கோவணம் கட்ட
ஓயாது காற்று

இளமை துவங்கி சம்சாரம் வரையிலான வாழ்வின் நிலையாமையை, அர்த்தமின்மையை, கீழ்மையை பகடி செய்யும் பட்டினத்தார் பாணி கவிதை இது. இறுதி வரி இருக்கிறதில்லையா “ஓயாது காற்று” அது தான் இக்கவிதையை ஒரு அற்புதமான படிமமாக்குகிறது. நீண்ட கயிற்றில் காயும் இட்லித்துணி, கரித்துணி, கோமணங்களை கற்பனை பண்ணுங்கள். அவற்றை காற்று அலைகழித்துக் கொண்டபடி இருக்கின்றன. இத்துணிகள் இளமையின், வாலிபத்தின், சம்சார சுகத்தின், பற்பல அன்றாட பொறுப்புகளின் இறுதி நிலையை சுட்டும் ஒரு அபாரமான சித்திரமாய் நம் முன் விரிகின்றது. தமிழில் எழுதப்பட்ட மிக மிக எளிதான, அதேவேளை துல்லியமும் ஆழமும் கொண்ட படிமக் கவிதைகளில் இதுவும் ஒன்று. ஆனால் முதல் தோற்றத்தில் இது படிமக் கவிதையாகவே தோன்றாது. ஏனென்றால் படிமக் கவிதை என்றால் கலகலவென கைவளையல்கள் ஒலிக்க, முகத்தில் பூச்சு வியர்வையில் கலைந்து ஒழுக பேந்த முழிக்கும் கல்யாணப்பெண்ணை போன்றொரு சித்திரம் தான் நமக்கு. ஒரு படிமக் கவிதை இது போல் நைட்டியிலும் தோன்றலாம்.


ஆசிரியர் பக்கம்


பெண்ணியமற்ற பெண் கவிதைகள் - சர்வோத்தமன்       


ஒரு முறை என் நண்பன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருந்த போது அவன், நாம் ஆண்கள் என்பதை போல அவர்கள் பெண்கள், அதற்கு அப்பால் ஒன்றுமில்லை என்றான்.நான் கேட்டேன் , ஒன்றுமில்லையா , அவன் ஆம் ஒன்றுமே இல்லை என்றான்.

ஆண்களில் எப்படி பலவித நிற வேறுபாடுகளுடன் கூடிய மனிதர்கள் இருக்கிறார்களோ அப்படியே பெண்களிலும் பலவித நிற வேறுபாடுகள் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள்.வெறும் அபலைகள், அபலைகள் போல வேஷம் போட தெரிந்தவர்கள் , குரூரமானவர்கள், கருணையே வடிவானவர்கள் என்று அதன் அலைத்தொகுப்பு மிகப்பெரியது.எப்படி ஆண்களை பற்றிய அனைத்து மனநிலைகளையும் கவிதையில் கொண்டுவர முடியுமோ அப்படி பெண்களை பற்றிய மனநிலைகளையும் கொண்டு வர வேண்டும்.

சமீபத்தில் பா.வெங்கடசனின் நீளா என்ற கவிதை தொகுப்பை படித்தேன்.நீளா என்பவள் திருமாலின் மனைவிகளில் ஒருத்தி.இருப்பற்றவள், நிழலானவள், உருவலி.அந்த நிழல் என்ற படிமம் கவிதை தொகுப்பில் இரண்டு விதமாக வருகிறது.முதல் படிமம் – இதில் பெண் குரலற்றவளாகவும் சொற்கள் அற்றவளாகவும் வருகிறாள், மற்றொரு படிமம் – இதில் அப்படி குரலற்று போன பெண் சொல்லும் சொற்கள் பெண்ணியம் என்ற கோட்பாட்டு சிமிழுக்குள் போடப்பட்டு முற்றிலும் வேறொன்றாக மாறும் சித்திரத்தை அளிக்கும் படிமம்.ஒரு கவிதை அல்லது சொல் எதை குறிக்க முற்படுகிறதோ அதற்காக அல்லாமல் வேறொன்றுக்காக அதை பயன்படுத்திக்கொள்வதை பற்றியும் இந்த தொகுப்பு பேசுகிறது.

இந்த தொகுப்பில் உள்ள ஒரு கவிதையின் தலைப்பு ஒரு புத்தகம் அல்ல அவள் கேட்பது.இதில் ஒரு வரி இவ்வாறு வருகிறது.ஒரு ரோஜாவையும் சில கண்ணாடி வளையல்களையும் அவள் உன்னிடம் வேண்டி நிற்கிறாள்.இனி மலர்களுக்கும் அணிகளுக்கும் திரும்புதெலன்பது துர்லபம் என்கின்றன புத்தகங்கள் என்ற மற்றொரு வரியும் அதை தொடர்ந்து வருகிறது.இதில் எளிமையாகவும் சாதாரணமாகவும் ஒரு பெண்னை எந்த கோட்பாட்டு இயல்களுக்குள்ளும் சிக்க வைக்காமல் முன்வைக்க விரும்பும் ஒரு சித்திரம் வருகிறது.போர்ப்பரணி என்ற ஒரு கவிதையும் இந்த தொகுப்பில் இருக்கிறது.நான் சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த கவிதை.நாம் பெரும்பாலும் போரை பற்றி பேசும் போது அதற்கு பின்னான அழிவு குறித்து பேசுகிறோம் அல்லது அந்த போர் எதற்காக யார் யார் மீது தொடுக்கிறார்கள் என்பதை பற்றி பேசுகிறோம்.அந்த போர் புரட்சி அல்லது கிளர்ச்சி அல்லது ஆக்கிரமிப்புக்கான போராக இருக்கலாம்.ஆனால் நாம் இவைகளை பற்றி எல்லாம் கவலைப்படாமல் போரை பற்றி பேசலாம் என்கிறது போர்ப்பரணி.அது போருக்கு உபயோகப்படுத்தப்படும் ஆயுதங்களை பற்றி பேச விரும்புகிறது.அந்த போர் வீரர்கள், அந்த போரின் வியூகங்கள், ஆயுதங்களின் சிறப்பு என்று போரின் அழகியலை பற்றி நாம் பேசலாம் என்கிறது.இந்த கவிதை இந்த தொகுப்பில் உள்ளது  அசாதாரணமான விஷயம்.இங்கு போர் என்பதை நாம் வேறு எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் பார்க்கலாம்.அதை தற்போது நாம் பெண் விடுதலை , பெண்ணியம் என்ற தளத்தில் பேசிக்கொண்டிருக்கும் தளத்திற்குள் பொருத்திப்பார்த்தால் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை இந்த கவிதை வேண்டி நிற்பதை புரிந்து கொள்ளலாம்.

நாம் ஏன் பெண்கள் பற்றிய கவிதைகளில் வெறுமன பெண்களை பற்றி மட்டும் பேசக்கூடாது.ஏன் அவர்களை எங்கோ கொண்டு சென்று நிறுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வு இருப்பது போல இறுக்கமாக நிற்க வேண்டும்.  கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பியவாறு இருப்பது உங்களுக்கு வலிக்க வில்லையா. உங்கள் கைகளை சற்று கீழே இறக்குங்கள்.பெண்களை பற்றிய கவிதைகளில் நாம் இனி பெண்களை பற்றி பேசலாம்.அவர்களின் மழலைத்தனத்தை, குரூரத்தை, கருணையின்மையை ,வன்முறையை , பாதுகாப்பின்மையை , சுயமாக வாழ விரும்புவதை, சுயமாக வாழ தெரியாததை, பாவனைகளை, பாசாங்குகளை, தாய்மையை , சமூக மனிதர்களாக அவர்களின் பங்கை, ஆன்மிக தேடலை,உடல் வதைகளை,கீழ்மையை ,மேண்மையை என்று எதையும் பேசலாம்.அதை பேசுவதன் மூலமாக நாம் அதன் அழகியலை பேசலாம், வெறுமன பேசுவதற்காக பேசலாம்.இன்று நகரமயமாதலை , உலகமயமாதலை ஆண்களை விட பெண்களே மிகவும் விரும்புகின்றனர்.அதை குறித்து நமது கவிதைகள் பேசலாம்.வெறுமன பெண் உடல் அதன் மீதான அடக்குமுறை அதலிருந்து மீண்டெழுதல் என்ற புரட்சி கோஷங்களை சற்று இடைநிறுத்தலாம்.எப்படியும் பெண்ணிய கோஷங்கள் வானை பிளந்தாலும் பிளக்காவிட்டாலும் அடுத்த ஐம்பது வருடங்களில் பெண்களுக்கான வாழ்க்கை இப்போது இருப்பதை விட சற்று மேம்பட்டே இருக்கும்.இன்று பெண்கள் அடைந்திருக்கும் நிலை அல்லது வெற்றி அல்லது விடுதலை அவர்களுக்கு சாத்தியப்பட நரசிம்மராவ் தலைமையிலான அரசாங்கத்திற்குதான் அவர்கள் நன்றி சொல்ல வேண்டும்.வேறு எந்த பண்பாட்டு மாற்றத்தாலும் இன்றைய நிலை சாத்தியப்படவில்லை.அந்த அரசாங்கத்தின் கொள்கை மாற்றமே இன்றைய பெண்கள் நேற்றைய பெண்களை விட சுய கெளரவத்துடன் சுயமாக வாழ வழி வகுத்திருக்கிறது.ஆதலால் கோஷங்களை விடுத்து எளிமையாக சாதாரணமாக பெண்களை பற்றி பெண்களும் ஆண்களும் எளிய கவிதைகளை எழுதலாம்.

மற்றொரு விஷயத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.இன்று இந்தியாவில் மிகுந்த சுதந்திரத்தோடு மிகுந்த மகிழ்ச்சியோடு சுயமான வேலையும் வாழ்க்கையும் என வாழ்ந்து வரும் பெண் ஒரு நிலை என்றால் அந்த பெண்ணின் மூதாட்டியின் வாழ்க்கை முறையை வாழ்ந்து வரும் இளம் பெண்ணும் நம் இந்தியாவில் தொல் படிமங்கள் போல இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.இரண்டாவது பெண் முதலாவது பெண்ணின் வீட்டில் வேலை செய்பவளாகவும் இருக்கலாம்.ஆக, பெண்களை பற்றி பெண்களும் ஆண்களும் பேச நிறைய இருக்கிறது.இறுதியாக ஒரு கவிதையில் வரும் அவள் என்ற வார்த்தை இயற்கையை குறிக்கலாம், அழகை குறிக்கலாம், நதியை குறிக்கலாம் சமயங்களில் அது பெண்ணையும் குறிக்கலாம் என்று நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.அப்படியாக பெண்ணியமற்ற பெண் கவிதைகள் நம் சூழலில் முளைத்தெழலாம்.





ஆசிரியர் பக்கம்



 ஏன் யாரும் கவிதைத் தொகுப்புகள் வாங்குவதில்லை? - ஆர்.அபிலாஷ்

பதிப்பகங்கள் பற்றி முருகேச பாண்டியன் பெப்ரவரி மாத உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அவருக்கு எதிர்வினையாக வா.மணிகண்டனும் ஒரு கட்டுரையை தன் வலைதளத்தில் எழுதி உள்ளார். இருவரும் ஏன் கவிதைகள் இங்கு பரவலாக படிக்கப்படுவதில்லை, ஏன் கவிதைத் தொகுப்புகள் விற்பதில்லை எனும் முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்கள்.

வா.மணிகண்டன் இரு காரணங்கள் சொல்கிறார். ஒன்று, இங்கு ஆயிரணக்கான கவிஞர்கள் உள்ளார்கள். அவர்கள் ஆளுக்கு ஒரு தொகுப்பை பரஸ்பரம் வாங்கினாலே தொகுப்புகள் தாராளமாய் விற்குமே? ஏன் வாங்குவதில்லை? கவிஞர்கள் சககவிஞர்களின் படைப்புகளைப் படிப்பதில்லை என்கிறார். இது சற்றே குழப்பமான வாதம். ஒருவர் கவிஞராக இருந்தாலும் ஒரு புத்தகத்தை வாங்கும் போது வாசகர் தான், கவிஞர் அல்ல. ஒரு கவிஞர் கவிதைத் தொகுப்புகள் தான் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர் நாவல்கள் வாங்குபவராக இருக்கலாம். கட்டுரைகளில் ஆர்வம் கொண்டவராக இருக்கலாம். சொல்லப் போனால் ஒருவர் கவிஞராக இருக்கும் பட்சத்தில் கவிதைகள் மட்டுமே வாங்கி வாசிப்பது ஒரு மோசமான பழக்கம். வெறும் கவிதை மட்டுமே வாசித்தால் நம் எழுத்து தேய்வழக்காகி விடும். எழுத்தை புதுப்பிக்க பல துறை சார்ந்த கட்டுரைகள், கதை, நாவல் ஆகியன நிச்சயம் உதவலாம். ஏன் செய்திக் கட்டுரை கூட நல்ல கவிதைக்கு தூண்டுதல் அளிக்கலாம். மனுஷ்யபுத்திரன் செய்திகளைக் கொண்டு பல அற்புதமான கவிதைகளை எழுதி இருக்கிறார். யுவனிடம் அறிவியல் கட்டுரைகளின் தாக்கத்தை, தேவதச்சனிடம் ஜென் தத்துவம் தரும் புது வெளிச்சத்தை காணலாம். நான் எந்த புத்தகக் கண்காட்சி என்றாலும் கவிதைத் தொகுப்புகளை தேடி வாங்குவேன். ஒருமுறை வா.மணிகண்டனுடன் புத்தகக் கண்காட்சியில் சுற்றும் போது அவர் தான் எந்த புது கவிதைத் தொகுப்பை பார்த்தாலும் வாங்கி விடுவதாய் சொன்னார். அவர் அவ்வருடம் நிறைய தொகுப்புகள் வாங்கினதாய் நினைவு. ஆனால் நான் ரொம்ப கராறாய் இருப்பேன். ஒரு இருபது கவிதைத் தொகுப்புகளை எடுத்துக் கொண்டு ஸ்டாலிலேயே அமர்ந்து பொறுமையாய் படித்து தேர்ந்தெடுத்து தான் வாங்குவேன். இதற்காய் இரண்டு மணிநேரங்கள் கூட செலவிடுவேன். இவ்வாறு தொகுப்புகள் வாங்குவதில் ஆளாளுக்கு அணுகுமுறை மாறும். என்னைப் பொறுத்தவரை புத்தகம் வாங்குவது முழுக்க முழுக்க அந்தரங்கமான தேர்வு. அது சமூக சேவையோ கருணை அடிப்படையிலான தேர்வோ அல்ல. எனது மிக நெருக்கமான நண்பர் என்றாலும் கூட பிடிக்கவில்லை என்றால் அவரது தொகுப்பை வாங்க மாட்டேன்.

இவ்வாறு வாங்குவது வாசகனின் உரிமை. எந்த எழுத்தாளனும் கடைக்குள் நுழைந்தால் எழுத்தாள அடையாளத்தை இழந்து வாசகனாகி விடுவான். அதனால் கவிஞர்கள் பரஸ்பரம் தொகுப்புகளை வாங்க எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.

இரண்டாவது காரணத்துக்கு வருவோம். கவிதைகள் சரியாக முன்னெடுக்கப்படுவதில்லை; அதற்கு காரணம் விமர்சனங்கள் மேலும் மேலும் கவிதையை புரியாத ஒன்றாய் மாற்றுகின்றன என்கிறார் மணிகண்டன். இது முழுக்க உண்மையே. விமர்சனங்கள் ஒன்று ஒரு கருத்தியலை கவிதை மீது திணிப்பதாகவோ, அரூபமான மொழியில் கவிதையை விமர்சிக்கிறேன் என களத்தில் குதித்து குட்டையை குழப்புவதாக உள்ளன. கவிதை அடிப்படையில் மனித மனம், சமூக, அரசியல் வாழ்க்கை பற்றி ஒரு புதுப்பார்வையை தருகின்றன. ஆழமான ஆன்மீக தளம் கொண்ட கவிதைகளும் உண்டு. ஆனால் அவை மிக அரிது. கவிதை விமர்சகனின் வேலை இந்த பார்வையை வாசகனுக்கு கடத்தி விடுவது. முடிந்தவரை இதை எளிதாக செய்ய வேண்டும்.
 மற்றொன்று: கவிதை ஒரு புதிரைப் போன்றதும் தான். கவிதை வாசிப்பதன் சுகம் ஒரு புதிரை அவிழ்க்கும் கிளர்ச்சிக்கு இணையானது. கவிதையை அவிழ்ப்பது புணர்ச்சிக்கு முன் ஒரு பெண்ணின் ஆடையை அவிழ்ப்பதைப் போன்றது. இதை எப்படி செய்வது என கற்க வேண்டும். கற்றுக் கொண்டால் கவிதை நாவல், கட்டுரை நூல்களை விட பல மடங்கு சுகமும் திருப்தியும் தரும். வாசகர்களில் மிக உன்னதமானவன் கவிதை வாசகன். அந்நிலையை அடைய பயிற்சி வேண்டும். விமர்சனங்கள் வாசிப்பதும், கவிதை பற்றின நுணுக்கமான உரையாடல்களை கவனிப்பதும் உதவும். எனக்கு சிறுவயது முதலே முதிர்ந்த வாசகர்களின் பரிச்சயம் கிடைத்தது. அவர்களுடனான உரையாடல் கவிதையை எப்படி ஒரு தாமரை மொட்டைப் போல் திறப்பது என கற்றுத் தந்தது. கவிதை குறித்த ஜெயமோகனின் விமர்சனக் கட்டுரைகள், மனுஷ்யபுத்திரனுடனான உரையாடல்கள் பெரிதும் உதவின. கல்லூரியில் ஐந்து வருட ஆங்கில இலக்கிய படிப்பின் போது அறிமுகமான பரவலான கவிதைகள், கோட்பாடுகள், இலக்கிய வரலாறு ஆகியவை கவிதையின் போக்குகளை தொகுத்துக் கொள்ள உதவின.
ஆனாலும் நான் நவீன கவிதை படிக்க ஆரம்பித்து ஏழு வருடங்களுக்கு பின்பு தான் வாசிப்பது சுலபமாயிற்று. அத்திறப்பு சட்டென ஒருநாள் நிகழ்ந்தது. அதற்கு பின்னால் எனது கடுமையான பிரயத்தனமும் பித்தும் இருந்தது. கவிதையை அறிவது என்பது ஒரு பெண் எதோ ஒரு கணத்தில் நம் மீது மையல் கொள்வது போலத் தான். அந்த கணம் ஏன் எப்போது நிகழ்கிறது எனத் தெரியாது. அது சுலபமும் அல்ல. ஆனால் நிச்சயம் நிகழும். காதலும் தொடர்முயற்சியும் இருந்தால்.

முருகேச பாண்டியன் இதே பிரச்சனையை எழுதுபவனின் பக்கம் இருந்து பார்க்கிறார். அதாவது, கவிதை புரியாதது வாசகனின் குறைபாடல்ல; மோசமான கவிதைகள் தான் இதற்கு காரணம் என்கிறார். மோசமான கவிதை என்றால் வீரியமற்ற செயற்கையான தட்டையான கவிதைகள். இத்தகைய கவிதைகள் வாசகனை துர்நாற்றம் வீசும் ஒரு வாயைப் போல் துரத்தி விடுகின்றன. என்னால் முருகேச பாண்டியனின் கருத்துடன் முழுக்க உடன்பட முடியவில்லை. கடந்த ஐந்து வருடங்களில் தோன்றின சிறந்த இளங்கவிஞர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்களை என்னால் பட்டியலிட முடியும். தமிழ் கவிதைக்கு வளமான மொழி. இங்கு நல்ல கவிஞர்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை யுவன், தேவதேவன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன் போல் தனித்துவமான குரல்கள் உருவாகாமல் இருக்கலாம். ஆனால் இத்தகைய கவிஞர்கள் கடுமையான கலாச்சார அழுதத்தின் விளைவாகத் தான் தோன்றுகிறார்கள். அவ்வளவு தீவிரமான, யாகசாலை போல எரிந்து கனலும் ஒரு வாசிப்பு, விவாதச் சூழல் இங்கு இப்போது இல்லை. இதைத் தான் முருகேச பாண்டியன் சுட்டிக் காட்டுகிறார்.
முன்பு இளம் எழுத்தாளர்கள் அடிக்கடி மூத்த எழுத்தாளர்களை சந்தித்து இலக்கியம் குறித்து உரையாடி வந்தார்கள். இந்த உரையாடல்கள் வழி ஒரு பண்பாட்டு பரிமாற்றம் நடந்தது. கவிதை மரபுடனான தொடர்ச்சி இருந்தது. இன்று அந்த மரபு துண்டுபட்டு விட்டது. இன்றைய கவிஞர்களுக்கு மூத்த கவிஞர்களுடன் பழக்கம் இல்லாதது போகட்டும், மூத்த கவிஞர்களின் கவிதைகளிடம் கூட பழக்கம் இல்லை. எழுத்து இன்று முழுக்க சுயவெளிப்பாட்டு கருவியாகி விட்டது. அதை ஒரு உளவியல், ஆன்மீக, அரசியல், பண்பாட்டு விசாரணையாக நாம் நினைப்பதில்லை. தன்னைப் பற்றி எழுதினால் போதும் என நினைக்கிறவன் எதையும் படிக்க வேண்டியதில்லை. இரண்டு மூன்று தொகுப்பு வெளியிட்ட சில கவிஞர்கள் கூட முக்கியமான கவிஞர்களை ஆழமாக வாசிக்காதவர்களாக இருக்கிறார்கள். இப்பிரச்சனை சிறுகதை, நாவல் போன்ற துறைகளிலும் உள்ளது தான்.

விரிவான ஒரு பண்பாட்டுத் தளத்தில் பார்த்தோமானால் கவிதை என்று  மட்டுமல்ல, வாழ்க்கையில், வேலையில், உறவுகளில், கலைகளில் எங்கும் அடிப்படைகளை அறிந்து கொள்ளாமல் நேரடியாக களமிறங்குவது மோஸ்தராகி விட்டது. ஒரு பெண்ணை புரிந்து கொள்ளாமலே காதலித்து திருமணம் செய்து கொள்கிறோம். ஒரு சாமியார் என்ன சொல்கிறார் என கவனிக்காமலே அவரிடம் சீடராக சேர்ந்து விடுகிறோம். எதற்கும் அவகாசமில்லை; அவசரம்! அவசரம்! கவிதையிலும் இந்த மனநிலை தான் பிரதிபலிக்கிறது.

இன்றும் மூத்த எழுத்தாளர்களை நேரடியாய் சந்தித்து உரையாடுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து அதெல்லாம் வெற்று அரட்டையாக இருக்கிறது என்பது தான் பிரச்சனை. எதையும் கற்காமல், உழைத்து அடையாமல், தனக்கு எல்லாம் தெரியும் எனும் அகந்தை இன்று எடுத்த எடுப்பிலே இளம் எழுத்தாளனுக்கு வந்து விடுகிறது. இதுவும் இந்த காலகட்டத்தின் பிரச்சனை தான். நாம் பவர்ஸ்டார்களின் காலகட்டத்தில் அல்லவா வாழ்கிறோம்!

இந்த சிக்கலுக்கு என்ன தீர்வு என உண்மையில் எனக்குத் தெரியவில்லை. முருகேச பாண்டியன் பரிந்துரைப்பது போல் எழுபது, எண்பதுகளில் போல எழுத்தாளர்கள் தீவிரமாய் உரையாடல் மேற்கொள்வது இனி சாத்தியமா எனத் தெரியவில்லை. வா.மணிகண்டன் சொல்வது போல் ஒரு கவிஞனின் புத்தகத்தை இன்னொருவன் வாங்குவது போல் ஈமு கோழி வணிக கனவுகளுக்கும் நடைமுறை மதிப்புள்ளதாகத் தெரியவில்லை.

இறுதியாக ஆனால் முக்கியமாக நாம் இன்னொன்றையும் பார்க்க வேண்டும். கவிதைத் தொகுப்புகளில் விற்பனை சோர்வு என்பது உலகு தழுவிய போக்கு. உலகின் அனைத்து மொழிகளிலும் கவிதை இரண்டாம் பட்சமாகத் தன இருக்கிறது. குறைவான பிரதிகள் வெளியிடப்பட்டு விற்கப்படாமல் இருக்கின்றன. மாறாக, நாவலுக்கு எங்கும் அமோக வரவேற்பு உள்ளது. இது ஏன்?
கவிதை ஒரு காலத்தில் கிட்டத்தட்ட எல்லா விசயங்களுக்குமான வெளிப்பாட்டு கருவியாக இருந்தது. சோதிடம், காமசூத்திரம், இதிகாசம், தத்துவம், அரசியல் விதிமுறைகள் அனைத்தும் கவிதையில் எழுதப்பட்டன. ஆனால் அறிவியலின் எழுச்சியுடன் அறிவுத்துறைகள் பெருகிட, எந்திரமயமாக்கலின் விளைவால் புத்தகங்கள் அனைத்து மக்களுக்கும் போய் சேரும் நிலை தோன்றிட உரைநடை இதற்கு மேலும் பொருத்தமான வடிவம் ஆகியது. அதீத உணர்வெழுச்சிகளின் பால் மக்கள் நம்பிக்கை இழந்தனர். தர்க்கமும், தகவல் சார்ந்த அறிவும் முக்கியத்துவம் பெற்றது. உலகம் முழுக்க மக்கள் நடைமுறை அறிவுக்கு அதிக முக்கியத்துவம் தரத் தொடங்கினர். மீபொருண்மை (metaphysical) தேடல்கள் காலாவதி ஆகின. மதம் வீழ்ந்தது. கடவுள் மறக்கப்பட்டார். பதிலுக்கு மத நிறுவனங்களூம் குருமார்களும் போற்றப்பட்டனர். இந்த சூழலில் இயல்பாகவே கவிதையும் வீழ்ந்தது. “கடவுள் இறந்து விட்டார்” என நீட்சே அறிவித்த போது கவிதை இறந்து விட்டது என ஏதோ ஒரு மூலையில் கவிஞனும் உணர்ந்தான்.

கவிதை இன்றும் முக்கியமானது தான். அனைத்து எழுத்து வடிவங்களுக்கும் தாய் வடிவம் அது தான். ஆனால் அது உலக மக்களின் பண்பாட்டு மையத்தில் இருந்து விலகி விட்டது. நாம் இன்று கவிதையின் அந்திம காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் வருந்தவோ ஆவலாதிப்படவோ ஒன்றும் இல்லை. அந்திமக் காலம் மாலையில் மெல்ல மெல்ல கூம்பத் தொடங்கியிருக்கும் தாமரையைப் போல அழகானது தான். கவிதையை போற்றவும் கொண்டாடவும் இப்போதும் நேரமுள்ளது.