இன்மை - கவிதைக்கான இணைய இதழ்

Showing posts with label மதிப்புரை. Show all posts
Showing posts with label மதிப்புரை. Show all posts

ஆசிரியர் பக்கம் – ஆர்.அபிலாஷ்

அகரமுதல்வன்: தீவிரமும் இசைமொழியும்

Image result for அறம் வெல்லும் அஞ்சற்க 

23 வயதாகும் ஈழக்கவிஞர் அகரமுதல்வன் மூன்று தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். அவர் வயதில் நாம் காதலையும் உணர்ச்சி குழப்பத்தையும் கற்பனாவாத கனவுகளை எழுதிக் கொண்டிருந்தோம். எனக்குத் தெரிந்தே பலர் முப்பதுகளில் தான் தீவிரமான எழுத்து நோக்கி நகரவும் கவிதையில் நிலைப்படவும் முயல்கிறார்கள். ஆனால் அகரமுதல்வன் வாழ்க்கையை தொட்டுத் தடவி அறியத் துவங்க வேண்டிய வயதிலேயே வதைமுகாம் அனுபவங்கள், சிதைந்த உடல்கள், கைவிடப்பட்ட குழந்தைகள், நடுக்கடலில் மரணத்தை நோக்கி வெறித்தபடி அமர்ந்திருக்கும் அகதிகள், வல்லுறவின் கடும் வலியின் மத்தியில் பழிவாங்கும் வெறியுடன் யோசிக்கும் பெண் போராளிகள் பற்றி பேசுகிறார். எந்த இந்தியத் தமிழனும் கற்பனை கூட செய்ய முடியாத அநீதிகள், கொடூரங்கள், உடலும் அறமும் முழுக்க அடையாளமற்று சிதைந்து போன சூழல் என பலவற்றை கண்டு கடந்து வந்திருக்கிறார். இது அவரை நாம் எவரையும் விட முதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. நான் ஆன்மீக, தத்துவ முதிர்ச்சியை சொல்லவில்லை. நாற்பது வயதில் ஒரு மனிதன் வாழ்க்கை பற்றி கொள்ளும் நம்பிக்கை வறட்சியும் எந்த தோல்வியையும் ஏற்கத் துணியும் மூர்க்கமும் அவரிடம் இந்த வயதிலேயே தோன்றி விட்டதைக் குறிப்பிட்டேன்.

அகரமுதல்வனிடம் நம் சமகால கவிதைக்கு விதிவிலக்காக ஒரு இசை லயம் உள்ளது. உச்சாடன தொனியுடன் – சற்றே என்.டி ராஜ்குமார் போல் – எழுதுகிறார். அறம் வெல்லும் அஞ்சற்க தொகுப்பில் உள்ள இவரது சில கவிதைகள் மேடையில் படித்தால் அதன் அர்த்தம் தவிர்த்து வெறும் ஓசையே கூட நம்மை உணர்ச்சிவசப்பட வைத்து விடும். ஆனால் வைரமுத்து, மு.மேத்தாவிடம் காணும் வெற்று அலங்கார ஓசைகள் அல்ல இவை. கவிதைக்கு ஆதாரமாய் உள்ள உணர்ச்சியை ஓசை வழியாகவும் மேலெடுத்து வாசகனை கிளர வைக்க இயலும். அதையே அகரமுதல்வன் செய்கிறார். அவர் வானம்பாடிகளைப் போல எதுகை மோனையை அதிகம் பயன்படுத்துவதில்லை. ஆனால் என்.டி ராஜ்குமாரைப் போல் சொற்களின் மாத்திரை அளவை சரியாய் உணர்ந்து அவற்றை கோர்ப்பதன் வழி மத்தள இசையை திரியில் சுடர் ஏற்றுவது போல் உருவாக்குகிறார்.

“நடுங்கிடும் சூரியனின் பயத்தை
வெடித்துப் போன நிலாவை
ஒளிந்து கொள்ளும் நட்சத்திரங்களை
உற்று நோக்கியபடி நிர்வாண சோதனைக்கு ஆட்பட்டிருந்தோம்”
எனும் வரிகளின் உள்ளார்ந்த தாளத்தை, அது அவ்வரிகளில் உருவாக்கும் பதற வைக்கும் வதைமுகாம் சித்தரித்துடன் பொருந்திப் போவதை கவனியுங்கள்.

அகரமுதல்வன் நம்மைப் போல் அன்பு, நீதி, மன்னிப்பு, தனிமனித உரிமை ஆகிய இருபதாம் நூற்றாண்டு, உலகப்போருக்கு பிந்தைய விழுமியங்களை நம்புவதில்லை. வ.ஜ.ச ஜெயபாலன், தீபச்செல்வன் போல் இவரும் ஒரு “போர்க்கவிஞர்”. களத்தில் அழியும் உடலை அவர் இழப்புணர்வுடன் பார்த்து இரங்குவதில்லை. வீழும் உடல் விதையாய் முளைத்து பழிவாங்கலுக்கு புது ஆயுதமான உருமாறும் என நம்புகிறார். இந்த நம்பிக்கையை அவர் அப்பட்டமாய் அன்றி நுணுக்கமாய் உணர்த்துகிறார். தன் சொற்களில், உருவகங்களில் ஒளித்து வைக்கிறார். கீழ்வருவதை கவனியுங்கள்:
“முன்னர் படகொன்றில்
புகலிடம் தேடி காணாமல் போனவர்களின்
குருதிகள் அலை அலையாய் எழுவதாய் தோன்றும்
கடல்வெளியில் சவக்குழி மணம் எங்கும் நீந்த
அவலப் பாடலை தேம்பித் தேம்பி பாடுகிறார்கள்
ஆதிமொழியில்
நிச்சயம் இவர்களும் ஈழத்தமிழரே”

இரண்டு விசயங்கள் முக்கியம் இங்கு. ஒன்று குருதி கடல் அலைகளாய் ஆர்ப்பரிப்பதாய் வரும் உருவகம் சக்தி வாய்ந்தது. கூர்மையானது. தமிழ்ச் சூழலில் இப்படியொரு உருவகம் கற்பனை பண்ண முடியாதது. அடுத்தது இப்பத்தியில் “ஆதிமொழி” முக்கியமான திறப்புச்சொல். அழிவின் விளிம்பில் ஈழத்தமிழர் பாடுவது ஆதிமொழி எனும் போது அவர்களின் கூக்குரல் அவலக்குரலாய் அல்லாமல் அடையாளப்போரின் நெடுங்கால முழக்கமாய் மாறுகிறது. இது போல் சட்டென ஒரு சொல் அல்லது உவமை, உருவகம் மூலம் கவிதையின் நிறத்தை மாற்றக் கூடியவர் அகரமுதல்வன்.

எங்கிருந்து ஆரம்பிக்கிறது தனது நிழல் என வினவும் சுந்தர ராமசாமியின் கவிதை நினைவிருக்கும். நிழல் எப்போதுமே கவிதையில் பிரக்ஞையின் குறியீடாய் தோன்றுகிறது. வெளிச்சம் உள்ள இடத்தில் நிழலில் இருந்து தப்ப இயலாதது போல மனிதனால் தனது சதா யோசிக்கும் மனதிடம் இருந்து தப்ப முடிவதில்லை. அகரமுதல்வன் இந்த குறியீட்டுக்கு முழுக்க வேறொரு தீவிர, போர் சார்ந்த நிறத்தை அளிக்கிறார்:
“ரத்த நிறத்திலொரு நிழல்
வன்மம் பீறிட்டு வழிய
நூற்றாண்டுகளுக்கு மேலாக படர்கிறது”

எங்கு சென்றாலும் குருதி பின் தொடரும் ஒரு பிறவியாக ஈழத்தமிழன் இங்கு தோன்றுகிறான். எப்படியான ஒரு துர்விதி இது?

இவரது சித்திரவதைக் கவிதைகள் வித்தியாசமானவை. நமது அரசியல் எழுத்துக்களில் உடல் மீதான வன்முறை ஒடுக்குமுறையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. சித்திரவதை நிறுத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே நம் கோரிக்கையாக இருக்கும். பூக்கோவின் தாக்கம் காரணமாய் சித்திரவதையோ மரண தண்டனையோ சமூகத்தை மறைமுகமாய் ஒடுக்குவதற்காய் அரசு செய்யும் காட்சிபூர்வ வன்முறை என்ற அளவில் தமிழில் பேசப் பட்டுள்ளது. ஆனால் அகரமுதல்வனின் கவிதைகளில் வன்முறை, பலாத்காரம், சித்திரவதை ஆகியன பதில் தாக்குதலுக்கு முன்பான பின்னடைவு மட்டுமே. கடுமையாய் நசுக்கப்படும் ஒருவன் தனது சிதைவுறும் உடல் என்பதை நாளை எதிரியை தன் மக்கள் திரும்ப தாக்குவதற்கான முகாந்திரமாய் மட்டுமே பார்க்கிறான். ஒரே நேரம் எதிரியின் தாக்குதலுக்கு உள்ளாகும் உடல் எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் மாறுகிறது:

”துயரார்ந்த கோடை காலத்தில்
நடுங்கியபடி
நான் சரணடைதலை நிகழ்த்த
பீறிட்டு வெளியே வரும் வன்மங்களோடு
எனக்கான விசாரணை
தொடங்குகிறது…
எனது ஜீவிதம் நிறைவாக்கப்படும்
வீர மரணத்தை எதிர்பார்த்து
இன்னும் என்னென்ன நடக்குமென்று
ஒரு பட்டியலை மனதற்குள்
போடுகிறேன்…
நாயகன் களத்திடை வீழ்ந்தது உறுதியானது
ஏ.கே 47ன் வீரியம் பற்றி
ஆடையொன்றுமில்லாமல் எழுதிக்
 கொண்டிருக்கிறேன்
நான் இழக்கும் குருதிகளால் வலுப்பெற
அக்காவின் குழந்தைகளுக்கு கவிதை”

போராளி சிந்தும் குருதி போராட்டத்தை வளர்த்தெடுக்கும் எனும் நம்பிக்கை இன்று நீர்த்து விட்டது. உடல் மீதான வன்முறையில் பாதிக்கப்படுபவருக்கு எந்த பலனும் இல்லை, உடல் ஒடுக்குபவனின் கையில் ஒரு ஆயுதமாய் மாறுகிறது என்பதே பின்நவீனத்துவ நம்பிக்கை. இடதுசாரிகள் கூட இன்று ரத்தசாட்சிகள் பின் திரளுவதில்லை. ஆனால் அகரமுதல்வன் போராளியின் குருதியை போராட்டத்துக்கான எரிசக்தியாக பார்க்கிறார். உலகப்போருக்கு முன்பான, பின்நவீனத்துவ சிந்தனைகளுக்கு முன்பான மனநிலை இது. இதில் எந்த குற்றமும் உள்ளதாய் நான் கூறவில்லை. அமெரிக்க ராணுவத்தில் கோட்பாட்டு பிடிப்பின்றி பங்கெடுக்கும் ராணுவ வீரனுக்கு ஏற்படும் கசப்புணர்வும் அவநம்பிக்கையும் வெறுமையும் வியட்நாமில் தன் இருப்புக்காய் போராடும் போராளிக்கு இராது. போரில் பங்கெடுப்பது வேறு வெளியில் இருந்து போரினால் பாதிக்கப்படுபவர்கள் வேறு. உதாரணமாய், சித்தாந்தன் இரண்டாம் வகையினருக்கான கவிதையையும் (ஷோபா சக்தி அவர்களுக்கான புனைவையும்), அகரமுதல்வன், தீபச்செல்வன் போன்றோர் முதல்வகையினருக்கான கவிதையையும் எழுதுகிறார்கள். இரண்டாம் வகையினர் போரைப் பற்றி சமகால சிந்தனையுடனும் முதலாம் வகையினர் நானூறு வருடங்களுக்கு முந்தைய பார்வையுடனும் இருக்கிறார்கள் எனலாம். ஈழத்தில் உள்ள சூழல் காலத்தை நானூறு வருடங்களுக்கு முன்பாக தள்ளி விட்டது என்றும் பார்க்கலாம்.

உடல் ரீதியான வன்முறையை கொண்டாடும் இக்கவிதைகளில் ஒன்றில் அவர் கவிதை எழுதுவது என்பதே மொழியை கொல்லுவது தான் என்கிறார்.
“கருணையென்பது சிறிதளவுமின்றி
எனக்கு முன்னர் தோன்றிய
சொற்களை கொலைப்படுத்தி
கவிதையென்றழைக்கிறேன்”
கொல்லுவது போதாதென்று அவன் மொழியை சிதைக்க, வதைக்க ஏங்குகிறார்.
“என் மரணத்துக்கு பின்னான
ஒரு மழைநாளில்
அளவிட முடியாத கொலையுணர்வோடு
மீண்டும் மீண்டும் சொற்களை கொன்றிருந்தேன்”

கொலையை அவர் ஒருவித விவசாயமாய் பார்க்கிறார். அதை வெற்றியை அறுவடை செய்யும் உடல் மீதான விவசாயம் என்கிறார். இவ்வரிகளை கவனியுங்கள்:
“துப்பாக்கி செடியை
உயிர்முழுவதும் விதைத்து செல்லும்
வன்முறை விவசாயிகளால்
தடயமின்றி சுகவீனமாகிப் போவதைத் தவிர”
எதிரியின் தோட்டாக்கள் இங்கு ஈழப்போராட்டத்தின் விதைகளாய் மறு உருவெடுக்கின்றன. ரவைகளால் துளைக்கப்பட்ட உடலை விவசாய நிலமாய் வேறு யாரும் - உலகக்கவிதையில் கூட - சித்தரித்ததாய் நினைவில்லை.

அன்பும், நிராசையும், அபத்தமும், அரசியல், தத்துவ, அற விசாரமும் சமகால இந்திய தமிழ்க்கவிதையில் பிரதானமாய் இருக்கையில், அகரமுதல்வனின் வரிகளின் அடிநாதமாய் இருப்பது மேற்சொன்னவற்றை நிராகரித்துச் செல்லும் “கொலையுணர்வு” தான். அதாவது கடும் வன்முறையை சித்தரிக்கும் நமது தலித் கவிதைகளில் கூட இந்த கொலையுணர்வு இல்லை. காரணம் நாம் ஒரு ஜனநாயக தளத்தில் இருக்கிறோம். அகரமுதல்வன் ஜனநாயகம் இறந்த, சர்வாதிகாரம் மட்டுமே சாத்தியமுள்ள ஒரு மண்ணில் நின்று எழுதுகிறார்.
நிலத்தை இவர் தொடர்ந்து பெண்ணுடலாகவே சித்தரிக்கிறார்.

“பெரும் மெய்மையற்ற ஊழி
வீரியமில்லாத இருள்மையால்
நிலத்தை புணர்ந்தபடி இருக்கிறது”
விதியை ஆண்மையற்ற காதலனாகவும், அவனது வெற்றுப்புணர்ச்சிக்கு அர்த்தமற்று இடம் அளிப்பவளாக ஈழ அரசியலையும் காட்டுகிறார்.
நேர்மாறாய், வீரம் செறிந்த போராட்ட சூழல் என்பது பெண் எனும் நிலத்தில் வீரியமிக்க ஆண் செய்யும் புணர்ச்சியாக உள்ளது:

“…கண்ணுறங்கும் காலத்தை
காவலரண் ஒன்றை கருத்தரிக்க செலவு செய்
எழுந்து வருகிறது வெள்ளரசு
தமிழ் விழுதுகள் வீழ்த்த”

“இன்னும் போராடும் இசைப்பிரியா” எனும் கவிதையில்
”இனவெறியை கர்ப்பம் தரித்து
கொலைகளை பிரசவிக்கும் நிலமொன்றில்”
எனும் போதும் பெண்ணுடல் செயலற்ற நிலையில் ஆணின் கருவியாகத் தான் இருக்கிறது. இசைப்பிரியாவின் வல்லுறவு காட்சியை சித்தரிக்கும் போது அகரமுதல்வன் அங்கு அவலத்தையோ வேதனையோ முன்னிறுத்தாமல் வீரத்தையும் போராட்ட நம்பிக்கையையும் வலியுறுத்துகிறார். ஒருவிதத்தில் அவர் இந்த பலாத்காரத்தை போராட்டத்தின், போரின் அன்றாடப் பகுதியாக, குண்டு படுவது, கைகாலை இழப்பது போல, பார்க்கிறார்.

”குருதிப்பிரியர்களால் துயிலுரியப்பட்டவள்
அவயங்களைக் கீறிய மிருகங்களின் முகத்தில்
காறி உமிழ்ந்து மரணத்தை அழைத்திருப்பாள்”

”காறி உமிழ்ந்து மரணத்தை” அழைக்கிறார் இசைப்பிரியா. அவர் வேதனை பொறுக்காது கூக்குரலிடவில்லை. தில்லியில் கொடூரமாய் பலாத்காரம் பண்ணப்பட்டு கொல்லப்பட்ட நிர்பயா பற்றி நமக்கு கிடைத்த, நாமே உருவாக்கிக் கொண்ட சித்திரம் முற்றிலும் மாறுபட்டது. பொதுவாய் இந்தியாவில் பெண் மீதான பாலியல் வன்முறை பலவீனர்கள் மீதான ஒடுக்குமுறையாய் பார்க்கப்படுகிறது. அகரமுதல்வன் இங்கு இசைப்பிரியாவை பாதிக்கப்பட்டவராய் காட்டுவதை தவிர்க்கிறார். அவருக்கு பெண்ணுடல் அனுபவிக்கும் கொடுமைகள், அவமானங்களை விட அது எதிர்வரும் போராட்டத்திற்கு எப்படியான முகாந்திரமாகப் போகிறது என்பது தான் முக்கியமோ என எண்ணத் தோன்றுகிறது.
பெண்ணுடலை இது போன்று இந்திய தமிழ்க்கவிதையில் சித்தரிப்பது இன்று கற்பனை செய்ய முடியாதது. அப்படிச் செய்யும் கவிஞனை பெண்ணியவாதிகள் ஊறுகாய் போட்டு விடுவார்கள்.

அகரமுதல்வனுக்கு பெண்ணுடல் மட்டுமல்ல பிரபாகரனின் உடல் கூட வெறும் கருவி தான் என்பது “தலைவன் என்பவனும் தசைகளின் கூட்டுறவே” எனும் கவிதையில் தெரிய வருகிறது. மரித்து கடலடியில் மீன்களால் உண்ணப்படும் தலைவரின் உடலை மறந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இறந்த மறுநொடி பிரபாகரனின் முக்கியத்துவம் இல்லாமல் ஆகி விடுகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்க் கவிதை வெகுவாக எளிமைப்பட்டிருக்கிறது. அனுபவங்களை நேரடியான மொழியில் எழுதுவது, பெரும்பாலும் உருவகங்களை தவிர்த்து உவமைகளை பயன்படுத்துவது, குறியீடுகளை நெற்றியில் பொட்டு போல பயன்படுத்துவது தான் இப்போதைய போக்கு. மாறாக அகரமுதல்வனின் கவிதை இடுப்புக் கச்சையிலும் வாளிலும் ஏகப்பட்ட மணிகளை கோர்த்து கிலுகிலுவென துள்ளும் கேரளாவின் சாமியாடிகளைப் போல் நம் முன் வருகிறது. ஒவ்வொரு சொல்லுக்கு பின்னும் ஒரு உருவகம் கோர்க்கிறார். இது அவரது கவிதையை படிக்க சிரமமாக்குகிறது. கீழ்வரும் பத்தியை பாருங்கள்:

“பூதைகுழி வாழ்வின் பூரண மடியில்
பரவி வீழும் நீதியின்மைகள்
இரக்கக் கீற்றுகளற்று
தொடர் யுகக் கொலை நிகழ்த்தும்
புரியாத மரண சமிக்ஞை
லாடங்களில் படர
நாடோடிக் குதிரைகளென
எங்கேனும் வாழப் பழகி
குளம்படிக் காயங்களோடு
இருண்ட எல்லை நோக்கி
விரைந்து
டோலருக்குள் மறைகிறோம்”

புதைகுழி வாழ்வு, இரக்கக் கீற்று, குளம்படிக் காயம், டோலர் என ஒரு நீண்ட வாக்கியத்துள் நான்கு உருவகங்களுக்கு மேல் வருகிறது. இப்படி சரம் சரமாய் வரும் உருவகங்கள் குறைந்தால் அவரது கவிதைக்குள் வெளிச்சம் அதிகமாகும்.
கீழ்வருவது போன்ற மிகவும் காட்சிபூர்வமான அட்டகாசமான வரிகளையும் அகரமுதல்வன் அங்கங்கே எழுதுகிறார்.
“மழையடித்து குமுழியிடுகிற ஊற்றில்
நட்சத்திரங்கள் தோன்றித் தோன்றி மறைய
இரவுப்புதர்களால் நகரத் தொடங்கின
நிலங்களை களவாடும் இனவாத மிருகங்கள்”
இவ்வரியில் மூன்று விதமான சலனங்கள் வருகின்றன. மழையில் குமிழியிடும் நீர்நிலை, குமிழிகள் மத்தியில் தோன்றி மறையும் நட்சத்திர பிரதிபலிப்பு, இவையிரண்டையும் போன்றே மாய்மாலமாய் நகர்ந்து சூழும் எதிரிப்படையினரின் “இரவுப்புதர்கள்”. இரவின் சிறுசிறு அசைவுகளும் அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் மெல்ல மெல்ல உச்சநிலைக்கு கொண்டு போகிறவை. தாக்குதல் எனும் ஒரு பெரிய அசைவை காட்ட இது போன்ற பீதியூட்டும் சிறு அசைவுகளை சித்தரித்தால் போதும்.

அகரமுதல்வனின் சிறப்பு அவரது சரளமான, காட்சிபூர்வமான உருவக மொழிதான். மிக நுணுக்கமான உணர்வுகளை தீவிரமாய் கண்முன் கொண்டு வர அவரால் இயல்கிறது. உதாரணமாய் உடலுக்குள் புதைந்து அரிக்கும் காமம் பற்றின இச்சித்தரிப்பை பாருங்கள்:
“முத்தங்கள் விரிக்கும் காமத்தின் நாகம்
ஸ்பரிசங்களுக்குள் புற்று எழுப்பியிருந்தது”

அல்லது காதல் நினைவுகளைச் சுட்டும் இந்த உருவகத்தை கவனியுங்கள்:
“பொழிந்து கொண்டிருக்கும் மழையில்
அசைந்தபடி செல்லும் தூறலின் அமிழ்தம்
இலைகளில் தொங்கி என்னில் படுகிறது
மாயங்கள் மரித்த பிம்பங்களின் முத்தமிடலோடு”
மழை பெய்த பின் மரக்கிளைகளின் கீழ் நிற்கும்/நடக்கும் எவரும் சில்லென ஒரு துளி எதிர்பாராது கன்னத்தில் விழுந்து தீண்டும் போது திடுக்கிடுவோம். அது சட்டென நம் மனநிலை மாற்றி நினைவுகளை புரட்டிப் போடும். அது போன்று, காதல் பற்றின சிந்தனையின் போது ஏதாவது ஒரு நினைவு, ஒரு சொல், ஒரு வாசனை நம்மை மனம் குலைய வைக்கக் கூடும்.

”அச்சமடையத் துவங்கும் இரவுப் பொழுதுகளில்
யுத்தவெளியின் குருதிக் கறைகளை
தீராக் கனவுகளில் வரித்து தூங்குகிறோம்”
போன்ற மிக உக்கிரமான வரிகளையும் அவர் உருவாக்குகிறார்.
அகரமுதல்வனின் முக்கியமான பலவீனம் வடிவச் சிதறல் தான். அவரது கவிதைகள் பாதரசத்தை தரையில் சிந்தினாற் போல் உள்ளன. பல அழகான கவிதைகள் ஒரு புள்ளியை நோக்கி நகராமல் தனித்தோடுகின்றன. சில கவிதைகளில் மைய உணர்ச்சியில் இருந்து விலகி விவரிப்புகள், கூற்றுகள், சித்தரிப்புகள் என கவனம் சிதறி வடிவ நேர்த்தியை இழக்கிறார். கவிதை அடிப்படையில் மென் உணர்ச்சிகளால் ஆனது. அதன் மென்மையான உடல் பாரமான உருவகங்கள், குறியீடுகளை அளவுக்கு மேல் அடுக்கினால் தாங்காது. இன்னும் கச்சிதமாய் திருத்தி தேவையற்ற உருவகங்களை நீக்கும் பட்சத்தில், எளிய வரிகள் மூலம் உக்கியமான உணர்ச்சிகளை சித்தரிக்க அவரால் இயலும். உடலுறவில் போல கவிதையிலும் உச்சகட்டம் ஒருமுறை தான் நிகழ வேண்டும். அதுவரை சன்னமான, எளிய நேர்த்தியான இயக்கம் போதும். அகரமுதல்வன் இந்த சமநிலையை விரைவில் அடைவார் என எதிர்பார்ப்போம்.


இந்த நூலை இவ்வளவு அழகாய், நேர்த்தியாய் வெளியிட்டுள்ள சாய்ராம் பதிப்பகம் மற்றும் யாவரும்.காமை நிச்சயம் பாராட்ட வேண்டும். கவிதைத்தொகுப்புகள் இவ்வளவு கவனமுடன் தயாரிக்கப்படுவது அரிது தான்.

நமக்கிடையிலான தொலைவு: ஒடுக்கப்பட்டவர்களின் சாதியத்திற்கு எதிரான குரலும், மனிதத்திற்கான விழைவும் எட்டியிருக்கும் தொலைவு - தீபா ராமமூர்த்தி


Image result for நமக்கிடையிலான தொலைவு மதிவண்ணன்                                                                                                            


நமக்கிடையிலான தொலைவு என்னும் கவிதைத் தொகுப்பின் மூலம் மதிவண்ணன் அவர்கள், சாதியத்தின் கொடுமைகளை நியாயப்படுத்தி, குற்றங்களை கெளரவிக்கிற இச்சமூகத்தை கடுமையாகச் சாடுகிறார். இவரது கவிதைகளை கற்பிக்கப்பட்ட புனிதங்களைத் தகர்த்தெறியும் ஆற்றல்மிக்க ஆயுதம் என்றே சொல்லலாம். இந்துத்துவத்தையும் அது போதிக்கும் சாதியத்தையும் மட்டுமின்றி, பாலின அரசியலையும் எதிர்த்து தனது கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார். அலங்காரச் சொற்கள் ஏதுமின்றி, தலித்/அருந்ததியர் இருப்பு நிலையை பட்டவர்த்தனமாய்ச் சொல்லும் விதம் பிரஞ்சுக் கவிஞர் சார்லஸ் போதெலெயரின் ”தீமையின் மலர்கள்” கவிதைத் தொகுப்பை நினைவூட்டுகிறது. இவரது கவிதைகளில் பிராமணத்தையும் சாதியத்தையும் சாடும் கருப்பொருளுக்கு அப்பாற்பட்ட தூய்தமிழுக்கு எதிரான மொழியமைப்பே இவரது தலித்திய அடையாளத்தை அழுத்தமாய்ச் சொல்கிறது. தலித்/அருந்ததிய மக்களின் வாழ்க்கை முறை, சாதிய ஒடுக்கத்திற்கு எதிரான அவர்களது பார்வை ஆகியவற்றை அவர்களின் வாழ்வியல் மொழியுனூடே பதிவு செய்திருப்பதாலேயே கவிதைகளில் எதிர்ப்பின் வலு கூடியிருக்கிறது.
”வெட்டியெடுத்துச் செல்ல தோதாய் முடி கொண்ட தலைகளின் கீதம்” எனும் கவிதை, சாதியப் போராட்டங்களில், வாழ்வா சாவா என்ற நிச்சயமற்ற, நிம்மதியற்ற சூழழ்களில் இருப்பு நிலை இலக்கியமாய் மாற்றப்படுவதைச் சொல்கிறது.
     வாளோடும் வார்த்தைகளோடும்
     நீ வருவது
     அடுத்த நிமிடமாய்க் கூட இருக்கலாம்.
     பத்திரமாய் ஒளித்து வைக்கிறேன்
     என் உயிரை
     பதட்டத்தில் துடிக்கும்
     இதயத்தின் தாளத்திலான
     இந்தப் பாடல்களில்.
தலைப்பிடப்படாதக் கவிதைகளில் ஒன்றான, “எதிர்ப்படும் போதெல்லாம்” எனத் தொடங்கும் கவிதை, தன் உயர் நிலையை முன்னிறுத்திக் காட்டுவதற்கென்றே பிறரை இழிநிலைக்குத் தள்ளும், சாதிய இந்துக்களின் கீழ்க் குணத்தை இனங்கண்டுச் சொல்கிறது,
     தாமதமாகவே உறைத்தது
     உன் வெள்ளுடுப்பை
     வெட்டி அதிகாரத்தை
     இன்ன பிறவற்றை
     நிச்சயிக்கவென்றே
     எச்சில் நீர் உனக்கு
     ஊறும் ரகசியம்.
     இப்போதெல்லாம்,
     உன் வாயிலடைக்க
     கைகளில் கொண்டு திரிகிறேன்
     தூமைத் துணிகளையும்
     தூமையில் தோய்ந்த
     இக்கவிதைகளையும்,
இக்கவிதையில் வெளிப்படும் கோபமும் ஆவேசமும், சாதியச் சமுதாயம் காலங்காலமாய் தலித்திய/அருந்ததியச் சமூகத்தினருக்குத் தந்து வரும் மன நெருக்கடியின் விளைவே.
ஒரு சில சமூக அவலங்களை எடுத்துரைக்கும் கவிதைகளில், பக்திப் பாடல்களின் மொழியமைப்பைக் கையாண்டு உயர் வழக்கு, தொனி ஆகியவற்றை பகடி செய்துள்ளார், எடுத்துக்காட்டாக,
     ….பார்ப்பனர் புகழுரைத்தல்,
     புளுகு பரப்பல்,
     காவலர் பொய்த்திறன் வியத்தல்
     பாலியல் பெருங்கதைகள் புனைதல்
     ஊடகக் கூற்று நிகழுமிடங்கள்
     இவை என்மனார் புலவர்.
ஊடக அறம் என்பதே மறந்து, உண்மைக்கு மாறான புரளிகளைத் திரித்து, பொய்யான தகவல்களை மக்களிடையே பரப்பும் ஊடகத் துறையை இக்கவிதையில் பகடி செய்துள்ளார்.
இந்நூல் வெறும் சாதியெதிர்ப்புக் கவிதைகள் எனும் வகைப்பாட்டுக்குள் அடங்காத வண்ணம், காதல், காமம், சுதந்திரம், அடையாளம், சமூக அவலங்கள் என பல்வேறு கருப்பொருள்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகவே வந்துள்ளது. பொது இலக்கிய வட்டத்துள் பயன்படுத்தத் தயங்கும் பல அமங்கலச் சொற்களும், வசைச் சொற்களும் இத்தொகுப்பு முழுவதும் பரவலாக புழங்குகின்றன. அத்தகைய பயன்பாடே ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வெழுச்சிகளை, அவர்களுக்கே உரித்தான சீற்றத்துடன் வெளிப்படுத்துகிறது. சாதியவாதிகளுக்கு எதிரான தனது கருத்துக்களை பொட்டிலறைந்தாற் போல் இவர் சொல்லியிருக்கும் விதம் பாராட்டத் தகுந்ததே. இத்தொகுப்பின் மூலம், என்.டி.ராஜ்குமார், இமையம் முதலான எழுத்தாளர்களைப் போல தமிழ் தலித் இலக்கியத்திற்கு புதியதொரு மொழியமைப்பை பங்களித்திருப்பது வரவேற்கத்தக்கது.

                                                              

எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது: வினாடிகளில் உறைந்திருக்கும் மணி நேரங்கள் - R. அருள்

Image result for தேவதச்சன்

கால அளவையில் வினாடிகள் கண் இமைக்கும் நேரத்தில் கடந்து செல்பவை. ஒளி வீச்சுகள் மட்டுமே இக்கால வினாடிக்குள் நடைபெறும் நிகழ்வுகள். மற்றபடி எந்த நிகழ்வும் நடத்தப்படுவதற்கு கால அவகாசம் நீடிக்கப்பட வேண்டியிருக்கிறது. சாகசக் காவியங்களின் யுகங்கள் கால அளவில் அளக்க முடியாததாயினும் சாகச வீரனின் இளமைப் பருவக் காதல் நேரத்தில் அளக்கப்படுகிறது. நாடகங்கள் ஐந்து மணி நேரங்களில் இருபத்துநான்கு மணி நேரக் கதை அளக்கப்படுகிறது. இங்கு நம்ப முடியாத இதிகாச காலங்களும், யதார்த்த காலங்களும் இலக்கியக் காலத்தால் நாம் ஏற்றுக்கொள்ளுமாறு அளவிடப்படுகின்றன. இவைகளை இலக்கிய கால அளவைகளில் அளப்பது எளிது. காரணம் கற்பனைக் காலமும் யதார்த்தக் காலமும் காலத்தில் நீண்டவை. அதில் கலைஞன் தான் செய்ய முற்படுவதை எளிதாக இலக்கியக் காலத்தில் சாதித்துவிடுகிறான். நம்முடைய மனமும் அதனை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் இப்பிரபஞ்சத்தின் யதார்த்தம் இவ்விரண்டு கால நிலைகளில் இருப்பதாகத் தெரியவில்லை. இப்பிரபஞ்சந்தின் நிஜம் அதனுடைய அணு வடிவில் இருக்கின்றது, அதன் இயக்கம் காலத்தில் மிகக் குறைந்த அளவான வினாடிகளில் உறைந்திருக்கின்றன. இப்பிரபஞ்சத்தின் நிதர்சனத்தை உணர அதன் அணுத்துகள் வடிவில் இருக்கும் இருப்பை ஆராய வேண்டியிருக்கிறது. தன் கரமசாவ் சகோதரர்கள் நாவலில்  தாஸ்தாவஸ்கி இவ்வாறு கூறுவார், "கடவுளுடைய படைப்பில் அனைத்தையும் நேசியுங்கள், அதில் உள்ள அனைத்தையும் துகள் துகள்களாக, ஒவ்வொரு இலையையும் நேசியுங்கள். படைப்பின் வெளிச்சத்தில் ஒவ்வொரு கதிரையும் நேசியுங்கள்" என்பார். இப்படிப்பட்ட காலத்தின் நுணுகிய வடிவத்தையும், அணுவை ஒத்த குன்றிய அளவினையும் இலக்கிய வகைமைகளில் கவிதையால்  மாத்திரமே அளக்க முடியும் என்பதை தேவதச்சன் தன்  எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது  கவிதைத் தொகுப்பில் சாதித்துக் காட்டுகிறார்.

இவரது கவிதைகள் காலத்தின் மிகக் குறைந்த நேரமான வினாடிப் பொழுதை தன்னுள் உள்வாங்கி அந்நேரத்தை ஒரு நீண்ட செயல் நடக்கும் நேரமாக மாற்றுகிறார். இதில் எவ்வாறு இமைப்பொழுதில் இத்தகைய காரியங்கள் நடக்கின்றன என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. "உச்சி" என்ற கவிதையில்,
வேகமான பஸ் பயணத்தின்
நெருக்கடி சாலையில், என்
இடது பக்கம் தெரிகிறது
பூங்கா ஒன்று
என ஒரு வினாடிப் பொழுதில் சற்றென கடந்து போகும் பூங்காவை தன் கவிதையில் படம் பிடித்துவிடுகிறார். இந்த இமைப்பொழுதேயான காலம் கவிதையில் சற்று நீட்டிக்கப்பட்டு ஒரு விளையாட்டே நடத்தப்படுகிறது. அனைத்தும் ஒரு நொடிப் பொழுதில்.
ஒரு வினாடி
தொன்மையான
பல நடை பாதைகளில்
நடந்து சுற்றி வந்தன
ஒரு வினாடி
அங்கிருந்த
சறுக்கில் ஏறி-
இறங்கும் முன் நகர்ந்து விட்டது பஸ்
என இமைப்பொழுதில் நீண்ட நேர செயல்பாட்டை நடத்தி விடுகிறார். இங்கு வினாடி என்பது மணி நேரங்களாக விரிவாக்கப்படுகின்றன. இதே போன்று "தருணம்" என்ற கவிதையில், தன் இரயில் பயணத்தில் இறந்த தன் தந்தையை பார்க்க பயணிக்கும் ஒரு பெண்ணை முதியவளின் மடியில் பார்க்கிறார். இங்கு அவருக்கு ஒரு இமைப்போழுதுதான் அவகாசம் அதில் தன் அப்பாவுடனான நீண்ட நாளைய அனுபவத்தை கவிதைக்குள்ளாக்குகிறார். அவருடைய "பேச முடியாத தருணங்களின் எண்ணிக்கைகள் கூடிக்கொண்டே போகிறது".
சிலக்கவிதைகளில் எளிதில் நகரும் நேரமும் அதில் இடம்பெரும் செயல்பாடுகளும் தக்கவைக்கப்படுகின்றன. "அவசர அவசரமாய்" கவிதையில் சடுதியில் நடைபெறும் செயல்களை கவிதைக்குள் உள்வாங்கிக் காட்டுகிறார். இந்தக் கவிதையில் பல பயனுள்ள அவசரமான செயல்கள் காட்டப்பட்டாலும் அவசியமற்ற ஒரு செயல் உட்செருகப்படுகிறது.
குப்பைத் தொட்டி அருகே
மன நோயாளி ஒருத்தி
அவசர அவசரமாய்
பூவை பிய்த்து தன்
மடியில் கொட்டுகிறாள்.
இங்குதான் கவிதை தன் உன்னத நிலையை அடைகிறது. இதுவரை நடைபெற்ற அவசரத்தில் அவசியம் என்று செய்யப்பட்ட  அனைத்தும் அவசியமில்லாத இந்த மன நோயாளியின் செயலால் அர்த்தம் அற்றவைகளாக ஆக்கப்படுகின்றன. அதே நேரத்தில் யதார்த்தத்தில் பொருளற்ற செயல் கவிதையில் பொருள் கொண்ட செயலாக மாறுகிறது. இங்கு நாம் இரசிப்பது மன நோயாளியின் அவசர செயலை தானேயன்றி மற்ற பயனுள்ள செயல்களை அல்ல.
தாஸ்தாவஸ்கி கூறுவது போன்று பெரும்பான்மையால் இப்பிரபஞ்சத்தில் கண்டு கொள்ளாமல்  விடப்பட்ட காரியங்களை கவிஞராகிய தேவதச்சன் கவிதைப் படுத்துகிறார். இங்கு நாம் எதை கவனத்திற்குரியவை என்று கருதுகிறோமோ அதனை முற்றிலும் நிராகரித்துவிட்டு நம்மால் சற்றும் கவனம் பெறாதவைகளை  கவிதையாக்குகிறார். "மணல் துகள்" கவிதையில்,

கடற்கரையில்
ஒலிப்பெருக்கிகள் அலறிக்கொண்டிருக்கின்றன
என ஒரு பிரமாண்ட அரசியல் கூட்டத்தை நம் கண்முன் காட்டுகிறார். இதில் நம் கவனம் இயல்பாக  தலைவர்களின் பேச்சைப்பற்றிதான் பேசப்போகிராறோ  என்ற எதிர்பார்ப்பு தோன்றும். அவைகள் அனைத்தும் அர்த்தம் அற்றவையாகி விடுகின்றன. பெருங்கூட்டம், ஒலிப்பெருக்கிகள், தலைவர்களின் குழுமம் என அனைத்தையும் உதாசினப்படுத்திவிட்டு தன் கவிதையை 
ஏகமாய்
பரந்திருக்கும்
பழுப்புநிற மணல் வெளி
எனத் தொடர்ந்து,
பின்மாலை நேரம் என்பதால்
காற்று பலமாய்
வீசத் தொடங்குகிறது
மாபெரும் மணல்வெளி  அல்ல.
மணல் துகள்கள்
சின்னஞ்சிறு மணல் துகள்கள்
தன்னந்தனியாய்
தனித்தனியாய்

என்று வாழ்வின் பொய்மை முற்றிலும் நிராகரிக்கப்பட்டு துகள்கள் வடிவில் உருக் கொண்டிருக்கும் பிரபஞ்சத்தை காட்சிப்படுத்துகிறார் . இங்கு வாழ்வின் அழகியல் அதன் பிரம்மாண்டத்தில் இருக்கும் போலித்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு அதன் துகள்களின் நிலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. கவிதையில் வாழ்வின் பெரும்பகுதியில் இருக்கும் பொய்மையிலிருந்து சிறிது சிறிதாக நகர்ந்து அணுத்தன்மையிலான பிரபஞ்சத்தை காட்சிப்படுத்துகிறார். இங்கு பிரபஞ்சத்தின் விஸ்தாரம் படமாக்கப்படாமல் அதன் துகள் வடிவம் காட்சி படுத்தப்படுகிறது. "துளிகள்" கவிதையில்
மின்னலோடு
மழை பெய்யத் தொடங்கிவிட்டது
எங்கள் ஊரின் ஜனத்தொகை
நாலு லட்சத்து
75,447 பேர். மதிய நேரம் என்பதால்
சாலையில் அதிக
கூட்டம் இல்லை
4,75,447 துளிகள்
பெய்து கொண்டிருக்கின்றன
என பெரும் மக்கட்தொகை புறக்கணிக்கப்பட்டு மழைத்துளிகள் கணக்கிடப்படுகின்றன. மழைத்துளிகள் எண்ணப்பட கூடுமா என்ற கேள்வி எழும்போதே மக்கள் தொகை கணக்கும் எந்த அளவில் நம்பகமானது என கேட்கத் தோன்றுகிறது. இங்கு முதல் குறிப்பிடப்படும் எண்ணிக்கை நம்மை திகைப்பூட்டவில்லை. ஆனால் இரண்டாவது வகை எண்ணிக்கை வெறுமனே குருட்டுக் கணக்காக இல்லாமல் வாசகனின் மனதில் மழையின் காட்சி விரிவுபடுத்தப்படுகிறது. எண்ணிக்கை என்ற நிலையை கடந்து காட்சிப்படுத்துதல் என்ற மற்றொரு நிலைக்கு நம் மனது நகர்த்தப்படுகிறது. இதே போன்ற காட்சி பிம்பம் "துளிகள் - 2" கவிதையிலும் நாம் பார்க்க முடியும்.
லாரி ஓட்டுனர்
குளித்து முடித்து விட்டார்
சாலையோர
குளக்கரையில்
விரிந்தபடி கிடக்கிறது
அவரது
காக்கிச் சீருடை
சற்று தொலைவில்
அவரது லாரி.
 என வாழ்வின் அலுத்து விட்ட செயல்பாடுகளை நம்முன் காட்டுகிறார். இதைத் தொடர்ந்து,
....அதன்
நிழலில் இரண்டு ஆடுகள்
வாய்மென்றபடி சாவகாசமாய்
அவருக்கு யாரோ சொல்லியிருக்கிறார்கள்:
ஆடுகள் லாரியை தின்று விடாது என்று
என்று கவிதையை இரண்டாவது நிலைக்கு நகர்த்துகிறார். இங்கு அலுத்துப்போன வாழ்க்கையை சற்று விநோதமாக காட்சிப்படுத்துகிறார். இதிலும் வாழ்க்கையின் தனித்தன்மை பெரிதாக காட்டப்படவில்லை. மூன்றாவது நிலையில்தான் கவிதை தன் உன்னதத்தை தொடுகிறது. இங்கு வாழ்க்கையின் அன்றாட நிலையும், வினோத நிலையும் கடந்து
முதுகை
துவட்டியபடி
சடார் சடார் என்று
உதறுகிறார் நீலநிறத் துண்டை
அவரது நெற்றியில், கழுத்தில்
தோளில்
தெறிக்கின்றன
நூற்றுக்கணக்கான துளிகள்
நூற்றுக்கணக்கான கணங்கள்

என நீர்த்துளிகள் நூற்றுக்கணக்கில் கவிதை-கணக்கில் கணக்கிடப்படுகின்றன. முன்பு கூறிய இரண்டு நிலைகளும் நம்மை திகைப்பூட்டுவதில்லை. கடைசியில் படமாக்கப்படும் துளிகளும், கணங்களும் மட்டுமே நம் ரசனையை தூண்டுகின்றன. கவிதைக்கான நம் ரசனை அதன் மிக நுண்ணிய நிலையிலான பிரபஞ்சத்தை காட்சிப்படுத்துதலில் இருக்கிறது.
தேவதச்சனின் மற்றுமொரு கவிதை உத்தி, இன்மையில் நிலை கொண்டிருக்கும் இருத்தலின் நிலையை  உருவப்படுத்துதலில் இருக்கிறது. பொதுவாக இருத்தலை விநோதமாக்குவதுதான்  கவிதையின் சிறப்பாக இருந்துவருகிறது. ஆளால் இன்மைக்கும் கூட ஒரு இருத்தல் உண்டு என்பதை காட்டுவது கவிதையில் மட்டுமே சாத்தியம் என்பதை தேவதச்சன் நிருபித்து காட்டுகிறார். "நிர்வாணம்" என்ற கவிதையில்,
யாரும் இல்லை என்பதால்
வீட்டில் சில நேரம்
நிர்வாணமாக இருந்தாள்.
யாருமில்லை என்பதால்
நிர்வாணமாக இல்லை
இங்கு தனிமையில் பெண்ணின் ஆடையின்மை நிர்வாணமாக காட்டப்படாமல் மற்றவர்களின் இன்மையினால் நிர்வாணத்தையே அவள் ஆடையாக்கிக் கொண்டிருக்கிறாள் என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது. நிர்வாணமே ஆடை என்ற நிலையின் தத்துவத்தை கவிதை பேசுகிறது. "மொழி" என்ற கவிதையில்  பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளையும் படிப்பதற்கு மொழி பயன்படுகிறது என்பதை முன் வைத்து மொழியே இல்லாத இன்மை நிலையில் படிக்கப்படும் மொழியை  நமக்கு காட்டுகிறார். இதில் மொழியற்ற மொழியில்
நானோ
தமிழ் மொழி கூட சரியாகத்
தெரியாத தறுதலை
இரண்டு கழுகுகள் சதா
சுற்றிக் கொண்டிருக்கும்
வானத்தை படித்துக் கொண்டிருக்கிறேன்
என் இமைகளின் மொழியில்
"என் கண்ணாடி" என்ற கவிதையிலும் இதேபோன்ற தனக்குத் தெரியாத ஒன்று தெளிவாக தெரிகிறது என நகைச்சுவை ததும்ப இன்மையின் இருத்தலை சாத்தியப்படுதுகிறார். இவ்வாறு வினாடிகள் கதை நிகழும் களமாக நீட்டிக்கப்படுவதும், மாபெரும் பிரபஞ்சம் துகள்கள் நிலையில் காட்சிப்படுத்தப் படுவதும், யதார்த்தத்தின் இன்மை நிலை உருவம் கொண்டு இருத்தல் நிலைக்கு கொண்டுவரப்படுவதும் இலக்கிய வகைமைகளில் கவிதையால் மாத்திரமே சாத்தியம் என்பதை தேவதச்சன் தன் எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது கவிதைகளில் நிருபித்து காட்டுகிறார். அதே நேரத்தில் இப்படிப்பட்ட யதார்த்தம் மற்ற எந்த இலக்கிய வகைமைகளிலாவது சாத்தியப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.