ஒரு பறவையின் இரண்டு தருணம் - ரியாஸ் குரானா






நீண்ட நாட்களாக நினைத்து
இன்றுதான் சாத்தியப்பட்டது
ஆற்றங்கரைக்குச் செல்கிறேன்.
முன்பு அடிக்கடி வருவது.
சிறு மண்திட்டொன்றில்
அமர்ந்திருக்கிறேன்.
சிறிதும் உரசாமல்
என்னருகால் கடந்து செல்கிறது காற்று.
ஆற்று வாழையின்
ஒவ்வொரு பூவாகக் குந்தி
பின் எழுந்து செல்கிறது.
கண்ணுக்கெட்டிய துாரம்வரை
வானில் எதுவுமே இல்லை.
அப்போதுதான் ஒரு பறவைக் கூட்டம்
எனது பார்வையைக் கடந்துவிட
பறந்துகொண்டிருக்கிறது.


அந்தப் பறவைக் கூட்டம்
பழங்காலமொன்றுக்கு
என்னை அழைத்துச் சென்றது.

அதுவொரு பின்தங்கிய கிராமம்.
பரந்த பற்றைக் காட்டின் நடுவே
ஒரு சிறு குடிசை.
தேனீர்க் கோப்பை குடிசை போலவும்
அதிலிருந்து கிளம்பும் ஆவி போல
புகை மேலெழுந்து சுழன்று சென்றது.
வாசலில் சில சிறுவர்கள்
விளையாடிக் கொண்டிருந்தனர்.
அருகிருந்த கல்லொன்றில் அமர்ந்து
விரல் சூப்பியபடி,
ஒரு சிறுவன் மட்டும் பார்த்திருந்தான்.
கூட்டமாக சில பறவைகள்
வானில் தோன்றின.
வேட்டைக்காரன்
துப்பாக்கியை எடுத்து சுட்டான்.
இதைச் சகிக்க முடியாத நான்,
பழங்காலத்திலிருந்து புறப்பட்டு
ஆற்றங்கரை மண்திட்டில்
மீண்டும் வந்தமர்கிறேன்.

கூட்டத்திலிருந்து ஒரு பறவை
தாழப் பறந்து இறங்கி வருகிறது
அந்தப் பழைய பறவைதான்
சிறகின் இடையிடையே
வெள்ளை இறகுகள் மினுங்கின
சொண்டும் வளைந்திருந்தது
அடையாளங்கள் சரியாகப் பொருந்துவதால்
அதே பழைய பறவைதான்
எனக்கு சற்று தொலைவில் விழுந்து
துடிதுடித்துக்கொண்டிருந்தது.

அந்தப் பக்கம்,
எங்கோ சென்று கொண்டிருந்த ஆறு
பறவையை இழுத்துக்கொண்டு போனது
பத்து வருடங்களுக்கு முன் வேடன் சுட்டது
இன்றுதான் பறவைக்குப் பட்டதைக் கண்டு
செய்வதறியாது திகைத்து நிற்கிறேன்.
ஆற்றங்கரையை நீங்கும்போது,
சூப்பிக் கொண்டிருந்த விரலை
வாய்க்குள்ளிருந்து எடுக்க முடியவில்லை.
கவிஞர் றியாஸ் குரானா சிறு குறிப்பு