பொய் புகும் நேரம் - கிரிஜா ஹரிஹரன்





இப்போதெல்லாம்
பொய்
எல்லா இடமும்
தெரிகிறது.

அன்பாய் நினைத்து
அணைப்புக்குள்
நுழையும்போதே

லேசாய் உன் தோள்கள்
வழி
உன் வாயின் ஒரம்
இறுகும் தசையின்
வழி

மெதுவாய் அது
புகுந்து வருகிறது.

ஒரு கடிதம் எழுதி வரும் போதே
புள்ளிகளின் ஊடாக 
ஒய்யாரமாய்
வருகிறது.

கவிதை கதை
ஏன்
கற்பனையின் படைப்பில்
கூட

எங்கேயோ அது
புகுந்து வருகிறது.

தலையசைப்பு,
கை கொடுத்தலில் தொடங்கி
முத்தம்
உரசல்
அணைப்பு வரை
அத்தனை செயல்களிலும்
உறவு வளர வளர
பொய்யும் வளர்கிறது.

வெறுப்பில் மட்டுமே
பொய் புகும் போது
அது உடனே எல்லா
ஆயுதமும் போட்டு விட்டு
உண்மையான அன்பாய்
மாறி விடுகிறது.

பொய்யை கண்ட பின்னர்
வெறுக்க முடியாத அன்பைத்
தேடியே என் பயணம்
நீள்கிறது.