அகலாது அணுகாது - பா.சரவணன்




என் பழங்களை சாப்பிட்டீர்களா
சுவையாக இருந்ததா உயிர் வளர்த்ததா
அத்தோடு போங்கள்

என் வேர்களைத் தேடாதீர்கள்
அங்கு உலவும் பாம்புகளை கொல்வீர்களா?
எரிந்துகொண்டிருக்கும் கொடுந்தீயை அணைக்க முடியுமா?
அடியாழத்தில் இருக்கும் துளிதுளியாய் ஊரும் நீருக்காக
நரம்புகள் விரிய காத்திருக்க இயலுமா உங்களால்
எனது செயல் எனது தவம் எனக்கு வதம்
முக்கியம் ஒன்றும் இல்லை எனக்கு
நானும் மற்றொரு மரம்

மிகவும் அருகில் வராதீர்கள்
ஒருநாள்
தன்னைத்தானே எரித்துகொள்ளவும் கூடும் இந்த மரம்.